/indian-express-tamil/media/media_files/2025/09/02/kaniha-actress-2025-09-02-15-11-56.jpg)
Kaniha Actress
சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை எப்போதும் திரைக்குப் பின்னால் ஒரு மர்மமான உலகமாகவே நமக்குத் தெரிகிறது. ஆனால், சிலரின் வாழ்க்கைக் கதை, சினிமா கதைகளை விடவும் அதிக சுவாரஸ்யமும், உணர்ச்சிபூர்வமான தருணங்களும் கொண்டது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தான் நடிகை கனிகா. "ஃபைவ் ஸ்டார்" படத்தில் அமைதியான பெண்ணாக, "ஆட்டோகிராஃப்" படத்தில் தேன்மொழியாக, "வரலாறு" படத்தில் அஜித்தின் ஜோடியாக என பல வேடங்களில் நம் மனதை வென்ற கனிகாவின் நிஜ வாழ்க்கை, சினிமாவுக்கு அப்பாற்பட்ட அழகிய குடும்ப உலகைக் கொண்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த கனிகா, 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கனிகாவின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத, நெகிழ்ச்சியான அத்தியாயம் அவரது மகன் சாய் ரிஷியின் பிறப்பு. சாய் ரிஷி பிறந்தபோது இதய கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றுவது கடினம் என கூறியுள்ளனர். கனிகாவும் அவரது கணவரும் பெரும் சோகத்தில் மூழ்கினர். ஆனால், அவர்களின் விடாமுயற்சியும், நம்பிக்கையும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையும் மகனைக் காப்பாற்றின.
”எனக்குக் குழந்தை பிறந்தப்ப, அது பிழைக்காதுனு டாக்டர்கள் சொன்னாங்க. என் கண்ணுல கூட அவன் முகத்தைக் காட்டல. நான் மாலை 6.30 மணிக்குத்தான் டெலிவரி பண்ணினேன். மிட்நைட்ல ஒரு டாக்டர் என் ரூம்க்கு வந்தாங்க. என் கையில ஒரு பேப்பரைக் கொடுத்து, "உங்க குழந்தைக்கு இதயத்துல பிரச்னை இருக்கு. இன்னைக்கு நைட் கூட அவன் பிழைக்கமாட்டான்னு சொன்னதும் எனக்கு கை, கால் எல்லாம் நடுங்கிருச்சு. எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல.
நான் எழுந்து போய் பார்த்தப்ப, என் குழந்தை குட்டியா இருந்துச்சு. அவனோட உடம்பு முழுவதும் நூடுல்ஸ் மாதிரி பைப் குத்தி இருந்தாங்க. அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் ஒரு வாரம் லைஃப் சப்போர்ட்ல வச்சிருந்தாங்க. கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு மணி நேரம் அறுவை சிகிச்சை பண்ணியிருப்பாங்க போல.
அந்த நேரம் ஒரு டாக்டர் சொன்னாங்க, "குழந்தையோட இருதயம் ஸ்ட்ராபெர்ரி சைஸ்ல தான் இருக்கும். அதுல இருக்குற ஆர்ட்டிரிகள்லாம் முடி இழை மாதிரி இருக்கும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன வேணாலும் நடக்கலாம்." இதையெல்லாம் தாண்டித்தான் என் ரிஷி இன்னைக்கு என்கூட இருக்கான்” என்று உணர்ச்சிப் பொங்க கனிகா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய நாள் வரை, தனது மகனின் நலன் தான் தனக்கு முக்கியம் என்று கனிகா உறுதியாக நம்புகிறார். நடிப்பு, வியாபாரம், உடற்பயிற்சி என பல விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், ஒரு அம்மாவாக தன் மகனுக்காக செலவிடும் நேரம் தான் அவருக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தருகிறது. ஒரு வெற்றிகரமான நடிகையாக, குடும்பத் தலைவியாக, மற்றும் தாயாக கனிகாவின் வாழ்க்கை, பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.