பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டு எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது 300 வருடங்களுக்கு முன் அந்தப்புரத்தில் பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கு பேசுபவர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள் என்றெல்லாம் பேசியதாக கூறப்படுகிறது.
தெலுங்கு பேசுபவர்களை பற்றி நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக கூறி தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என 2 மொழியையும் படிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
"நான் தமிழ் பெண் என்றாலும், தெலுங்கு மொழியை மதிப்பவள் என்றும் என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று கூறினார்.
இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் மீதும் நான் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை பொறுமையாக எனக்கு விளக்கினார்.
நான் என் பாரதத்தின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கு மொழியோடு எனக்கு ஒரு சிறப்பு பந்தம் இருப்பது எனது அதிர்ஷ்டம்.
நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மன் மற்றும் தியாகராஜகிருதிகள் பாடிய பெருமைமிக்க நாட்களை ரசித்து வளர்ந்த நான் தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் குடும்பத்தை கொடுத்துள்ளனர்.
நான் கூறிய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களை குறித்து பேசியதே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தை பற்றி நான் பேசவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை நான் கூறிய கருத்துக்காக வருத்துகிறேன். அனைவரின் நலன் கருதி 3 நவம்பர் 2024 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய அனைத்து கருத்துகளையும் திரும்ப பெறுகிறேன்.
அந்த உரையில் நான் எழுப்பிய சில மிக முக்கியமான விஷயங்களில் இருந்து திசை திருப்புவதற்கே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் அணி திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“