தை அமாவாசை முன்னிட்டு புதுச்சேரி் கடற்கரை சாலை மற்றும் திருக்காஞ்சி சங்பராபரணி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து கடல் தீர்த்தவாரியில் பிரசித்திபெற்ற பல்வேறு கோவில்களை சேர்ந்த உற்சவர்கள் கலந்து கொண்டனர்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் தை மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அதிக சிறப்பு உண்டு. அதாவது இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர்.
தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான காலம் தட்சணாயன காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு அமாவாசையும் வழிபாட்டுக்கு புண்ணிய தினம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இதனால் இந்துக்கள் தை மற்றும் ஆடி மாத வரும் அமாவாசைகளில் தங்களை முன்னோர்களுக்கு திதி கொடுக்க அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தை அமாவாசையான இன்று புதுச்சேரி கடற்கரை மற்றும் திருக்காஞ்சி சங்கராபாணி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கோவில்கள், விழுப்புரம், கடலூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் இருந்து உற்சவர் சிலைகள் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரியும் நடைபெற்றது.
குறிப்பாக மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள், காமாட்சி அம்மன், சாரம் சுப்பிரமணியர், லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோயில், கௌசிக பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் கொண்டுவரப்பட்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி