/indian-express-tamil/media/media_files/2025/05/14/7ErWDmpmtp8qWMrZlQKo.jpg)
Anti-aging home remedies
பொதுவாக, நமது உடல் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் திகழ சித்தர்கள் அருளிய வழிமுறையே இந்த காயகல்பம் என்பது. இது மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி மற்றும் சில மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எனலாம்.
இதில் அடிப்படையாக நாம் கவனிக்க வேண்டியது மூச்சுப் பயிற்சி. முறையாக மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் நம் முகத்தில் இளமையான தோற்றம் நிச்சயம் உண்டாகும். இதுவே பிராணாயாம சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. இந்த மூச்சுப் பயிற்சிகளை நாம் மேற்கொள்ளும்போது, குறிப்பாக தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் நல்ல இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. நுரையீரலுக்கும் இது மிகவும் நல்லது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், முகத்தில் தேவையற்ற சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
அடுத்து, இந்த காயகல்ப முறைப்படி சில உணவுகளை உட்கொண்டு வந்தால், நம் உடல் மற்றும் தோல் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கும். அதில் முக்கியமானது தேற்றான் கொட்டை கற்பம். இந்த தேற்றான் கொட்டை கற்பம் என்பது தேராத உடலையும் தேற்றக்கூடிய தன்மை கொண்டது.
தேற்றான் கொட்டையை நாம் எப்படி பயன்படுத்துவது?
இதன் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் விதைப் பகுதிகளை மட்டும் சேகரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இதில் கரிசிலாங்கண்ணி சாறு விட்டு ஊற வைக்க வேண்டும். தேற்றான் கொட்டை மற்றும் கரிசிலாங்கண்ணி ஆகிய இரண்டு மூலிகைகளுமே மிகச்சிறந்த காயகல்ப மூலிகைகள் என்று சொல்லலாம். தீராத பல நோய்கள், ஏன் புற்றுநோய் வரைக்கும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த இரண்டு மூலிகைகளுக்கும் உண்டு. உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் மற்றும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகளும் பெரிதும் உதவுகின்றன.
தேற்றான் கொட்டையின் தோலை நீக்கிய விதைகளை எடுத்து, கரிசிலாங்கண்ணி சாற்றில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, வெயிலில் காய வைத்து அந்த கொட்டைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும். இதேபோல், மீண்டும் கரிசாலை சாறு விட்டு ஊற வைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். இந்த மாதிரி மூன்று முறை செய்ய வேண்டும். இதற்கே சுமார் பத்து நாட்கள் தேவைப்படும். பொறுமையாக ஊற வைத்து எடுத்த இந்த தேற்றான் கொட்டையை பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி பொடி செய்த கற்ப மருந்தினை நாம் பயன்படுத்தும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உடலில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.
இளமையாக இருப்பது, தோல் சுருக்கங்கள் மறைவது, உடலில் தசைகள் வலிமையடைவது போன்றவை நிகழும். சிலருக்கு தசைகள் மெலிந்து போயிருக்கும், வேலை செய்ய முடியாமல் சோர்வாக இருப்பார்கள், சருமம் பொலிவின்றி இருக்கும், உடலில் தெம்பு இருக்காது, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த கற்பத்தை சாப்பிடும்போது, சருமத்தில் பொலிவு உண்டாவது மட்டுமல்லாமல், தசைகள் மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சனைகளும் குணமாகும்.
இந்த கற்ப மருந்தை எப்படி சாப்பிட வேண்டும்?
அரை ஸ்பூன் அளவுக்கு, அதாவது கிட்டத்தட்ட மூன்று கிராம் அளவுக்கு எடுத்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும். காலை மற்றும் இரவு இரண்டு வேளையும், உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக இதை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முகச்சுருக்கம் போன்றவை நீங்கி, சருமம் பொலிவு பெறும்.
இரத்த சோகை (அனீமியா) குணமாகும். கரிசிலாங்கண்ணி சேர்ந்திருப்பதால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும். கரிசிலாங்கண்ணி இரத்தத்தை விருத்தி செய்வதற்கும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், கல்லீரல் பிரச்சனைகளை சரி செய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதைத்தவிர, தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு, தேங்காய் எண்ணெயில் கஸ்தூரி மஞ்சள் பொடி கலந்து உடல் முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். குறிப்பாக தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் மென்மையாக மசாஜ் செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கங்கள் மறைந்து, முகம் மற்றும் உடலில் உள்ள தசைகளில் இருக்கும் சுருக்கங்கள் (wrinkles) மறைய ஆரம்பிக்கும்.
நம் சருமம் பொலிவாக இருக்கவும், இளமையான தோற்றத்துடன் திகழவும், வயதிற்கேற்ற தோற்றம் இருந்தாலே போதும், ஆனால் பலரும் பத்து வயது குறைந்து தெரிவதாகச் சொன்னாலே நமக்கு உள்ளுக்குள் ஒரு உற்சாகம் பிறக்கிறது அல்லவா? அதுவே ஆரோக்கியமான முறையில், உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பேண வேண்டுமென்றால், இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.