/indian-express-tamil/media/media_files/2025/06/06/Isw73G17qijZsrPJeNad.jpg)
மதுரை கோட்டத்தில் தூய்மையாக பராமரிக்கப்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்கள், பணிமனைகள், ரயில்வே குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு பரிசு வழங்கப்பட்டது.
ரயில்வே வாரிய உத்தரவுப்படி மதுரை கோட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை இரண்டு மாதங்களுக்கு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த காலத்தில் வழக்கமான தூய்மை பணிகளோடு சிறந்த தூய்மை அர்ப்பணிப்பு பணி அனைத்து ரயில் நிலையங்கள், ரயில்கள், ரயில் பெட்டிகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நடைபெற்றது. இந்தப் பணியில் சிறந்த தூய்மை பராமரிப்பு செய்த ரயில் நிலையங்கள், ரயில்கள், பணிமனைகள் ஆகியவற்றிற்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
அந்த வகையில் தூய்மையாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில் நிலையங்களில் திண்டுக்கல், நடுத்தர ரயில் நிலையங்களில் செங்கோட்டை, சிறிய ரயில் நிலையங்களில் பழனி அருகே உள்ள புஷ்பத்தூர் ஆகியவை பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன. இந்த ரயில் நிலைய மேலாளர்களுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.
சிறப்பான தூய்மையாக பராமரிக்கப்பட்ட ஆயிரம் கிலோமீட்டருக்குள் இயங்கும் நெல்லை எக்ஸ்பிரஸ், ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் இயங்கும் திருநெல்வேலி - பிலாஸ்பூர் ரயில் ஆகியவை பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன. இந்த இரண்டு ரயில்களையும் சிறப்பாக பராமரித்த நெல்லை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை பகுதி பொறியாளருக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. கேரள மாநில அவனீஸ்வரம் ரயில் நிலையத்திற்கு சிறந்த நிலைய ரயில் பாதை தொகுப்பு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது. 100 குடியிருப்புகளுக்குள் உள்ள செங்கோட்டை ரயில்வே காலனி, 100 குடியிருப்புகளுக்கு மேல் உள்ள திருநெல்வேலி ரயில்வே காலனி ஆகியவற்றிற்கு சிறந்த தூய்மை பராமரிப்பு குடியிருப்புகள் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.
கழிவுப் பொருட்களினால் கோபுரம் போன்ற கலைப் பொருளை தயாரித்த மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை பகுதி பொறியாளர் பிரசன்னா தலைமையிலான குழுவிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தூய்மை விழிப்புணர்வு சம்பந்தமாக நடைபெற்ற கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இதற்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது.
கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கி பாராட்டினார் விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல் என் ராவ், சுற்றுச்சூழல் பொறியாளர் குண்டேவார் பாதல், கோட்ட ஊழியர்கள் நல அதிகாரி டி.சங்கரன் உட்பட அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.