நவராத்திரி பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது ஆயுத பூஜை. நவராத்திரியின் 9 நாட்கள் கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை.
துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மஹிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்கை. இந்த நாளையே துர்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர். 9 நாட்கள் சண்டை, மஹிஷாசுரன் வதத்துடன் வெற்றிப்பெறுவதால் 10வது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகின்றோம்.
இந்த 9 நாட்களும் பலரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து, பலகாரங்கள் சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கு அதனை பிரசாதமாக அளித்து கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை குறிக்கும் வகையில் வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதன் படி, 9வது நாளில் தேவி சரஸ்வதியை வழிப்படும் காரணத்தால், அன்று சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
கொடியன் மஹிஷாசுரன் தனது படையுடன் இணைந்து தேவி சாமுண்டேஸ்வரியை அழிக்கும் நோக்கத்துடன் சண்டையிட்டு வந்தான். இறுதியாக மஹிஷாசுரன் செய்யும் அக்கிரமங்களை பார்த்து, ஆக்ரோஷமாக அவதாரம் எடுத்தாள். அந்த அவதாரமே துர்கை அவதாரம். தனது கூர்வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு மஹிஷாசுரனை வதம் செய்தாள். இதன் காரணமாக ஆயுதபூஜை வழிப்பாடு காலம் காலமாக நடத்தப்படுகிறது என்று புராண கதைகள் சில கூறுகிறது.
மேலும் பிற புராண கதைகளில், குருக்ஷேத்திரா போருக்கு புறப்பட்ட அர்ஜுனன், தனது ஆயுதங்களை பிரயோகித்து போர் புரிந்தார். அந்த போரில் அவர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் 8வது நாளுக்கு பிறகு, 9வது நாளில் அனைத்து ஆயுதம், உலோகங்களால் ஆன பொருட்கள், வாகனம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இயந்திரங்கள் என அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து, அதற்கு குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் புத்தகம், பேனா, பென்சில் என அனைத்தையும் சாமி படம் முன்பு குங்குமம் பொட்டிட்டு நான்கு முனைகளிலும் மஞ்சள் பொட்டு வைத்து வழிப்படுவார்கள்.
வண்ணம் மற்றும் வாசனை நிறைந்த பூக்களால் சாமி படங்களுக்கு/விக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்படும். பிறகு பொரி, பழங்கள், இனிப்பு என பல வகை பலகாரங்களை சாமிக்கு படையல் அளிப்பது வழக்கம்.
ஆயுதபூஜையன்று, அறிவாற்றல் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவி, தூய்மை உள்ளத்தை வழங்கம் பார்வதி மற்றும் செல்வச் செழிப்பை அளிக்கும் தேவி லட்சுமி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.
இந்த நாளின் வழிபாட்டில், துன்பங்களும் தடைகளும் நீங்கி கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்லதையே ஆசிர்வதிக்க வேண்டும் என்று பெண் தெய்வங்களிடம் வழிப்படுவது நன்மையை உண்டாக்கும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Ayutha pooja here is how you should worship and celebrate this day