/indian-express-tamil/media/media_files/2025/04/14/uG70306XAaSYMOa2yEbq.jpg)
முகத்தை எப்போதும் பொலிவாகவும், மிருதுவாகவும் பராமரிக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். அதிலும், தற்போது கொரியன் சரும பராமரிப்பு முறையை பின்பற்றி, அவர்களைப் போன்ற சருமத்தை பெற வேண்டும் என்று இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர்.
ஆனால், இதற்காக இரசாயனங்கள் கலந்த ஃபேஸ் க்ரீம், சீரம் போன்றவற்றை பயன்படுத்தும் போது, அவை சில சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அந்த வகையில், ஆவாரம் பூவைக் கொண்டு இயற்கையான ஃபேஸ்பேக் எப்படி தயாரிக்கலாம் என்று அழகுக் கலை நிபுணர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
அடுப்பில் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை போட வேண்டும். ஆவாரம் பூ நன்றாக கொதித்ததும், அதனை வடிகட்டி மிக்ஸியில் அரைத்து பசை பதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
இத்துடன் ஒரு ஸ்பூன் முல்தானி மட்டி பொடியை சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம் முகத்திற்கு தேவையான ஆவாரம் பூ ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை முகத்தில் தேய்ப்பதற்கு முன்னதாக, ஆவாரம் பூ கொதிக்க வைத்த தண்ணீர் ஆறியதும், அதனை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.
இதன் பின்னர், ஆவாரம் பூ ஃபேஸ்பேக்கை முகத்தில் தேய்த்து விட்டு சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்யும் போது நம் முகம் பார்ப்பதற்கு மிகவும் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறி விடும்.
சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்பட்ட தடங்கள் மறையாமல் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட சருமம் கொண்டவர்கள், இந்த ஆவாரம் பூ ஃபேஸ்பேக்கை பயன்படுத்தலாம் என்று அழகுக் கலை நிபுணர் வசுந்தரா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.