சருமம் என்றால் முகம் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். ஆனாலும் நாம் இப்போது முக அழகை பேணுவது எப்படி என்று பார்க்கலாம்...
1)சன்ஸ்கிரீன்
மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் இப்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெவ்வேறு விதமான அலங்காரங்களில் மனதை செலுத்தி தங்களின் அழகைக் குறைய விடாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
அதுபோல முக வசீகரம் என்பது இப்போது மிக முக்கியமாகப் பேணப்படுகிறது. அதில் முக்கியப் பங்கு வகிப்பது சன்ஸ்கிரீன் என்று பேசப்படும் களிம்புகள் ஆகும். இளைஞர்களும் இளைஞிகளும் இப்போது நிறைய சன்ஸ்கிரீன் களிம்புகளைப் பூசுவதில் அக்கறை காட்டுகின்றனர்.
வெயில் தடுப்பு காரணியாக விளங்கும் இந்த சன்ஸ்கிரீன்களைத் தடவுவதன் மூலம் வெயிலினால் தங்களின் முகத்தோல் சுருக்காமல் பார்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
காலையில் வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் சன்ஸ்கிரீன் களிம்புகளைத் தடவிக் கொள்ளலாம். ஒரு முறை தடவிய சன்ஸ்கிரீன் 3-4 மணி நேரம் வேலை செய்யும். ஒரு சில சன்ஸ்கிரீன் களிம்புகள் எண்ணெய் பசையாக இருக்கும். சிலவற்றில் குறைவாக இருக்கும்.
எந்த கிரீம் உங்கள் தோலுக்கு ஏற்றதென்று நீங்கள் முடிவு செய்யாமல் அதை நல்ல தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வாங்கித் தடவி வெயிலின் கொடுமையிலிருந்து உங்கள் தோல் அழகைக் காப்பாற்றுங்கள். ஏனென்றால் நிறைய விளம்பரங்கள் வருகின்றன.
அவற்றில் எல்லாம் SPF 15 அளவு இருக்குமா என்பது சந்தேகமே. SPF 15 அளவு உள்ள சன்ஸ்கிரீன் தான் உகந்தது. அந்த அளவு இல்லாத களிம்புகளைத் தடவினால் மேலும் தொந்தரவுதான்.
2)உணவு
உடலுக்கு தேவையான சில சத்தான உணவுப் பொருட்களை உண்ணுவதால், உடல் அழகு மேலும் பொலிவு பெறும். கோதுமை, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களில் இருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகூட்டும் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
வைட்டமின் E சத்து மிகுந்த, இந்த தானியத்தின் தவிடுகள், முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச்சுருக்கத்தையும் அகற்றுகிறது. முகத்துக்கு இளமையையும், பளபளப்பையும் கூட்டுகின்றன.
சருமத்துக்கு இதமளிப்பதால் சருமத்துக்கான அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்துள்ள கோதுமையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மேலும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் வைட்டமின் சி நிறைந்ததாகவும், தேவையற்ற கொழுப்பு மற்றும் இனிப்பு குறைந்ததாகவும் இருக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் உள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். சருமமும் பொலிவாகும்.
3)துாக்கம்
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். சிவந்த கன்னங்கள் பெறுவதற்கு முகத்துக்கும் உடலுக்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். அது ஆழ்ந்த தூக்கத்தில்தான் கிடைக்கும். உறங்கும்போதுதான் தோலில் கொலாஜென் உருவாகும்.
இது, தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களைப் பெருக்கும்.
இரவு நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து, மொபைல் அல்லது டி.வி பார்க்கக் கூடாது. இதனால் கண்களிலுள்ள ஈரப்பதம் குறைந்து தூக்கமும் சீக்கிரம் வராது. அதோடு கண்களைச் சுற்றி கருவளையம் வந்து முகத்தின் அழகையே அது கெடுத்துவிடும் .
4)நீர்
நாள் ஒன்றுக்கு அவரவர் உடல் உழைப்புக்குத் தகுந்தாற்போல் நீரைப் பருக வேண்டும். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற காய் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும்.
காலை எழுந்தவுடன் பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். இதனால், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி, நாள் முழுவதும் உங்கள் முகம் புத்துணர்வோடு இருக்கும்.
வெறும் வயிற்றில் காபி குடிக்கக் கூடாது. இது உடலின் நீர்த்தன்மையை குறைக்கும்; உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவிடாமல் தடுக்கும். அதனால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்துவிட்டு, அரை மணி நேரம் கழித்து டீ அல்லது காபி குடிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான நீரால் மூன்று முறையாவது முகத்தைக் கழுவ வேண்டும்.
5)குளிர்காலமோ, கோடை காலமோ சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
க்ரீம்களைப் பூசுவதற்குப் பதிலாக சந்தனம், முல்தானிமட்டி, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலைப் பொடி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம். வாரம் ஒருமுறை இதைச் செய்தாலே போதுமானது.