சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இரத்த பிரிவுகளை ஆராய்ந்த பின்னர், கொரோனா வைரஸால் 'ஏ வகை இரத்த பிரிவு' கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
express.co.uk. என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ஏ வகை இரத்த பிரிவு உடையவர்களுக்கு அதிகளவில் தொற்று பரவியதாகவும், அவர்கள் கடுமையான அறிகுறிகளை உருவாக்கியதாகவும்... மாறாக, O வகை இரத்த பிரிவு கொண்ட கொரோனா வைரஸ் நோயாளிகள், லேசான அறிகுறிகளை மட்டும் வெளிபடுத்தியதாகவும் தெரிவித்தது.
வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் வாங் ஜிஙுவான் கருத்து தெரிவிக்கையில், "குறிப்பாக, ஏ வகை இரத்த பிரிவு கொண்ட நபர்களுக்கு தொற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்க தனிப்பட்ட பாதுகாப்பு தேவைப்படலாம். மேலும், இந்த வகை இரத்த பிரிவு கொரோனா நோயாளிகள் அதிகளவிலான கண்காணிப்பும், இடைவிடாத சிகிச்சையைப் பெற வேண்டியிருக்கும் ”என்றார்.
இந்த கொரோனா வைரஸ் ஆய்வு Medrxiv.org என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது. ஏ வகை இரத்த பிரிவு கொண்ட 85 பேர், ஓ வகை ரத்த பிரிவு கொண்ட 52 பேர் என மொத்தம் 206 கொரோனா வைரஸால் இறந்தவர்களை மையமாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், தியான்ஜின் நகரத்தில் உள்ள ஹீமாட்டாலஜி ஆய்வக பரிசோதனை ஆராய்ச்சியாளரான காவ் யிங்டாய் கூறுகையில் ," இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், நீங்கள் ஏ வகை என்றால், 100 சதவீதம் பாதிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் O வகை என்றால், நீங்கள் முற்றிலும் பாதுகாப்பானவர் என்றும் அர்த்தமல்ல. நீங்கள் இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும், அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும்,"என்று அவர் வாதிடுகிறார்.
இந்தியாவில், 169 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,000-த்தை தாண்டியுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சமூக விலகல், சுய தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க சோப்பு, தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சானிடைசர்கள் மூலம் அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய ஒரு நபருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதற்காக வணிக வளாங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர, மொபைல் போன், லேப்டாப் போன்ற பொருட்களைத் தொடுவதற்கு முன்பு அவற்றை கிருமி நீக்கம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil