கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், ஸ்ரீ அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்தர்ஷன். இவர் கடந்த 19-ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், அவர் மூளைச் சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதன்பேரில், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ராம்தர்ஷனின் பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து, அவரது கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டன.
இதில் கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ராம்தர்ஷனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, சொந்த ஊருக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்
செய்தி - பி.ரஹ்மான்