Chemicals in cosmetics | அழகுசாதனப் பொருட்களில் உள்ள இரசாயனங்கள் | 30 வயதைத் தாண்டிய பெண்களுக்கு கர்ப்பப்பையைத் தாக்கும் பொதுவான நோய்களில் ஒன்றே Fibroid எனப்படும் நார்த்திசுக்கட்டி.
இவை கர்ப்பப்பையின் தசைப்பகுதியில் ஏற்படக்கூடிய பெரிதும் தீங்கு விளைவிக்காத கட்டிகள் ஆகும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் இக்கட்டிகளினால் அவதிக்குள்ளாகின்றனர். இவை கடுகு அளவில் இருந்து நான்கு, ஐந்து கிலோ எடை அளவுள்ள கட்டியாகக்கூட இருக்கலாம். இளம் வயது பெண்களுக்குக்கூடக் கருப்பை நார்திசுக்கட்டிகள் வரக்கூடும்.
இதற்கான காரணம் துல்லியமாக தெரியாவிடினும் மரபணு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறைகள் ஆகியவை கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் ஏற்படுதலுக்கு பெரும்பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்ற பொருட்களில் பொதுவாகக் காணப்படும் தாலேட்டுகள், பெண்களில் நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தூண்டலாம் என்று சமீபத்தில் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும் ஏற்கனவே கட்டிகள் இருந்தால் அது விரைவாக வளர்ச்சி அடைவதற்கும் இது காரணமாக இருக்கின்றது.
நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வு, Proceedings of the National Academy of Sciences (PNAS) என்ற இதழில் வெளியானது.
தாலேட்டுகள் (phthalate) என்ற ரசாயனம், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஃபுட் பேக்கேஜிங், ஹேர் மற்றும் மேக்கப் பிரொடக்ட்ஸ் போன்ற பலவிதமான தயாரிப்புகளில் காணப்படுகின்றது.
இதில் Diethylhexyl Phthalate (DEHP) என்பது மிகவும் பரவலாக பயன்படுத்தக்கூடிய தாலேட் ஆகும். குறிப்பாக பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தக்கூடிய நெயில் பாலிஷ், ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் ஸ்ப்ரே போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில், தாலேட்டுக்கள் அளவு அதிகமாக இருக்கின்றன.
மேலும் டயப்பர் மற்றும் சானிட்டரி பேடுங்களிலும் DEHP தாலேட் அதிக அளவில் இருக்கின்றது. DEHP தாலேட் கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் அனுப்பப்படுகிறது. உணவு பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் போது இவை உணவில் கசிகிறது - இந்த இரசாயனங்கள் பால் மற்றும் மசாலாப் பொருட்களில் முன்னர் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த இரசாயனங்கள் உணவு, சுவாசம், தோல் தொடர்பு அல்லது அசுத்தமான காற்றை வெளிப்படுத்துவதன் மூலம் மனித உடலில் நுழையலாம். உறிஞ்சப்பட்டவுடன், இந்த தாலேட்டுகள் வளர்சிதைமாற்றம் செய்யப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படுகின்றன.
இது நச்சுவாய்ந்த ரசாயனமாக இருந்தபோதும் இவற்றின் பயன்பாடு தடை செய்யப்படவில்லை... இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் மனித திசுக்களுக்கு குறிப்பிட்ட தீங்கு விளைவிக்கும் என்று நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வின் ஆசிரியரான டாக்டர். செர்டார் புலன் கூறினார்.
இந்தியா உட்பட பல நாடுகளும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் தாலேட்டுகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. இருப்பினும். பல தயாரிப்புகளில், குறிப்பாக உணவு பேக்கேஜிங் மற்றும் சுகாதாரப் பொருட்களில் தாலேட்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ஆய்வின் படி, தாலேட்டுகளின் நீண்டகால வெளிப்பாடு பல உறுப்புகளின் செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கலாம், இது கர்ப்பம், குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் இனப்பெருக்க அமைப்புகளில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இந்த நச்சுகள் ஹார்மோன்களை சீர்குலைப்பதால், அவை கருச்சிதைவுகள் மற்றும் கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.
நச்சு இரசாயனங்கள் மற்றும் அதிகரித்த கருப்பை நார்த்திசுக்கட்டி வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள், தாலேட்டுகளால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் பற்றி விவரிக்கும் இந்த ஆய்வு, இத்தகைய நச்சு வெளிப்பாட்டைக் குறைக்கக்கூடிய அதிக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளின் தேவையை சுட்டிக்காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.