/tamil-ie/media/media_files/uploads/2017/11/akshaya.jpg)
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 பேரில் சென்னையை சேர்ந்த அக்ஷயா சண்முகம் (வயது 29) என்பவரும் இடம்பெற்றுள்ளார். Lumme Inc. நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான இவர், புகை பழக்கம் உள்ளிட்ட பழக்கங்களிலிருந்து வெளிவருவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததை பாராட்டும் வகையில் அவரது பெயர் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய அக்ஷயா சண்முகம், ”போதை பழக்கம், அதனால் நடத்தையில் ஏற்படும் மாற்றம் இவற்றை ஆராய்ந்து மருத்துவ ரீதியாக நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். இதன்மூலம், தனிநபர்கள் தங்கள் வாழ்வியல் முறை குறித்து தெளிவை பெற முடியும்”, என கூறினார்.
இதற்கான மருத்துவ சாதனத்தையும் அக்ஷயா சண்முகம் கண்டறிந்துள்ளார். இந்த சாதனம் அடுத்தாண்டு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் குறித்து அக்ஷயா சண்முகம் தெரிவித்ததாவது, முதல் இரண்டு வாரங்களுக்கு பயனாளர்கள் ஸ்மார்ட் வாட்ச் போன்றிருக்கும் சாதனத்தை அணிந்துகொண்டு தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்த சாதனம், அவருடைய நடத்தை, புகைபிடிக்கும் முறைகள், எந்த சமயங்களில் அவருக்கு புகைபிடிக்க வேண்டும் என தோன்றுகிறது என்பதை ஆராயும். அதன்படி, அவருக்கு எப்போது புகை பிடிக்க வேண்டும் என தோன்றுகிறதோ அதற்கு 6 நிமிடங்கள் முன்பு அச்சாதனம் அவரை அலர்ட் செய்யும்.
இந்த சாதனம் அறிவியல் ரீதியாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டு, 95% சரியாக செயல்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.