சென்னையில் உள்ள பழம்பெரும் கட்டிடங்களில் சுந்தர் மஹால் என்று அழைக்கப்படும் பிரபலமான ஜெய்பூர் மாளிகை 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கை சனிக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், சென்னையில் பழமையான ஜெய்பூர் மாளிகையை பாஷ்யம் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சுமார் 100 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
சுந்தர் மஹால் விற்பனை
தனியார் பள்ளி அருகே இருக்கும் இந்த மாளிகையை பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக வாங்கியுள்ளதாகவும், இதற்கான தொகையை கோபாலபுரத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு கட்டிட நிறுவனம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சுந்தர் மகால் என்று பிரபலமாக அழைக்கப்பட்டு வரும் இந்த ஜெய்பூர் மாளிகையின் பூர்வீக சொந்தக்காரர்கள், ஆங்கிலேயர்களுக்கு சிவில் பணிகளை செய்து வந்தவர்கள். இவர்களின் குடும்பத்தினர் தான் தற்போது கோபாலபுரத்தில் வசித்து வருகின்றனர்.
முன்னதாக இந்த கட்டிடத்தில் அமிதிஸ்ட் என்ற பிரபல காஃபி ஷாப் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. 2000 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காஃபி ஷாப், பின் நாட்களில் ராயப்பேட்டை அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து, வரலாறு ஆசிரியர் கொம்பை அன்வர் “இந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பழம்பெரும் கட்டிடங்கள் குறித்து விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும். பணம் முக்கியம் தான் ஆனால் பாரம்பரிய அடையாளங்களை பாதிப்பது சரியல்ல.” என்று தெரிவித்தார்.