New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/16/3W3P7uiOUMettdvAC4qT.jpg)
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை நடத்த பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் கோரிக்கையை வலியுறுத்தி தீ குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெய்வீக பக்தர்கள் பேரவையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. 108 வைணவ திவ்ய தேசத்தில் இது 40- வது திவ்ய தேசமாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தி பல நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மோற்சவம் நடத்த முயற்சித்த போது கோவில் நிர்வாகிகளுக்கும், பொது தீட்சிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தடுக்கப்பட்டு, இதுவரை பிரம்மோற்சவம் நடைபெறவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்த முன்வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது தீட்சிதர்கள் தடுத்து வருகின்றனர் .
மேலும் கோவிலில் உள்ள கொடிமரம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அதனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடிமரத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் மதுரையில் சைவ-வைணவர்களை ஒன்றிணைத்து நடத்தப்படுகிற சித்திரை திருவிழா போன்று, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை நடத்த பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மே மாத இறுதியில் தீ குளிப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.