கோவை பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் 86 வயதான மூதாட்டி பாலம் சுந்தரேசன். இவர் "Two Loves and Other Stories" (இரண்டு காதலும் பிற கதைகளும்) எனும் தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கல்வித்துணை தன்னார்வத் தொண்டு நிறுவனர் சிவசுவாமி இந்த புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த புத்தகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. இந்த கதைகள் நம் அன்றாட வாழ்வில் காணும் மக்களின் இயல்பான வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது.
தனது சிறுவயது முதலே பத்திரிகைகளில் கதைகளை எழுதி வரும் பாலம் சுந்தரேசன், கதம்பம் என்ற வலைப்பதிவில் தொடர்ந்து கதைகளை எழுதிக் கொண்டிருப்பவர்.
இதுகுறித்து பாலம் சுந்தரேசன் கூறுகையில், ‘அன்றாட வாழ்வில் பார்க்கும் பல்வேறு விஷயங்களை எனது கற்பனைகளுடன் சேர்த்து எழுதுகிறேன். 2010 ஆம் ஆண்டு "blog"ல் எழுதத் தொடங்கினேன்.
"Blog"ல் எழுதியதை எல்லாம் எனது மகன் பார்த்து இதை எல்லாம் புத்தகமாக வெளியிடலாம் என்று யோசனை வழங்கியதன் பேரில், இந்த 10 ஆண்டுகளாக எழுதப்பட்ட கதைகள் அனைத்தும் சேர்த்து இன்றைய தினம் புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.
இந்த புத்தகத்தில் உரையாடல் தான் அதிகமாக இருக்கும் அதுதான் என்னுடைய தனித்துவம் என்று பலரும் கூறுகின்றனர்.
படிப்பு அனைவருக்கும் அவசியம். அனைவராலும் படிக்க முடியும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என இளைய சமுதாயத்தினருக்கு அறிவுறுத்தினார்.
இந்த புத்தகம் கருட பிரகாஷன் என்ற வட இந்திய பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புத்தகம் www.garudabooks.com என்ற இணைய வழியில் வாங்க முடியும். மேலும் கூடிய விரைவில் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“