/indian-express-tamil/media/media_files/2025/03/05/2UA62VOXI9t47gmPVfbm.jpg)
கோவையின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் சார்பில் இலவச குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர். ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் கோவிலில் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என பல வாகனத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாளித்தார். இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கோனியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் ராஜவீதி தேர்திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் திடலை வந்தடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தும்,தேர் மீது உப்பு வீசியும் வழிபட்டனர். குறிப்பாக, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த தேர் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பலரும் அன்னதானம் வழங்கினர். குறிப்பாக அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் இலவசமாக குடிநீர் வழங்கி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர். தேரோட்டம் நிகழ்ச்சிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள 24 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.