/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project32.jpg)
Coimbatore
கோவை காந்திமா நகரைச் சேர்ந்த தம்பதி பீனா பிரீத்தி-பிரலோப். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். தங்களுடைய 3 வயது மகளுக்கு சாதி, மதம் இல்லையென சான்றிதழ் பெற விரும்பிய தம்பதி இது தொடர்பாக கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்று பெற்றுள்ளனர்.
இது குறித்து தம்பதியினர் கூறுகையில், "எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தால் போதும். எங்கள் மகளை சாதி மற்றும் மதம் என எதை வைத்தும் பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம். இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத்தில் சாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையையும் எங்கள் குழந்தை பெற இயலாது என்று தெரிந்துதான் விண்ணப்பித்தோம்.
சான்று பெற விண்ணப்பித்து பெறுவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. இதுபோன்று ஏன் வாங்குகிறீர்கள் என்றும் நிறைய பேர் எங்களிடம் கேட்டனர். இவ்வாறு சிலர் தங்கள் குழந்தைக்கு சான்றிதழ் வாங்க நினைத்தும் எவ்வாறு வாங்குவது என்று தெரியாமல் உள்ளனர். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தம்பதியினர் கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக, இதுகுறித்து பள்ளிகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் முன் அனைத்து மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், “மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, மதமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால், சம்மந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்" என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.