எலக்ட்ரீசியன் மூச்சுக் குழாயில் சிக்கிய இரும்பு நட்டு.. வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்
இரும்பு நட்டை விழுங்கிய எலக்ட்ரீசியன். மூச்சுத் திணறலுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அதனை அகற்றினர்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த 55 வயது முதியவர் சாம்சுதீன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி நட்டை வாயில் வைத்த படி வேலை செய்து கொண்டு இருந்தார்.
Advertisment
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அந்த போல்டு நட்டை விழுங்கினார். இதனால் அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் சக தொழிலாளர்களிடம் இதை தெரிவித்ததையடுத்து உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரை மருத்துவர்கள் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து மார்பில் எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர். அதில் அவர் விழுங்கிய நட்டு, இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் மருத்துவர் அலிசுல்தான் தலைமையில் மருத்துவர்கள் சரவணன், மயக்கவியல் துறை மணிமொழி, செல்வன், மதனகோபாலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சாம்சுதினுக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து நட்டை வெற்றிகரமாக அகற்றினர்.
முதல் படம்: மூச்சுக்குழாயில் சிக்கி இருக்கும் நட்டு, 2வது படம்: அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்ட நட்டு.
தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
கோவையில் இரும்பு நட்டை விழுங்கி ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு உடனடியாக சிகிச்சை கொடுத்து வெற்றிகரமாக நட்டை அகற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“