கோவை கோட்டை ஈஸ்வரன் தேர் திருவிழா: 32 ஆண்டு கால காத்திருப்புக்குப்பின் கண்கொள்ளாக் காட்சி

சித்திரை திருவிழாவின் தேரோட்டம் கடந்த 1993 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறாமல் இருந்தது பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

சித்திரை திருவிழாவின் தேரோட்டம் கடந்த 1993 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறாமல் இருந்தது பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை கோட்டைமேட்டில் வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரி சமேத சங்கமேஸ்வரர் கோவிலில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவின் தேரோட்டம் இன்று கண்கொள்ளாக் காட்சியாக அரங்கேறி வருகிறது.

Advertisment

பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோவிலில் தைப்பூசம் மற்றும் சித்திரை திருவிழாக்கள் சிறப்புற கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூசத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. எனினும், சித்திரை திருவிழாவின் தேரோட்டம் கடந்த 1993 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறாமல் இருந்தது பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கருணையான உத்தரவின்படி, இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் இன்று சனிக்கிழமை கோலாகலமாகத் துவங்கியுள்ளது.

Coimbatore

Advertisment
Advertisements

இதனை முன்னிட்டு, கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா இனிதே தொடங்கியது. தொடர்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், கைலாச வாகனம், மூஷிக வாகனம், ரிஷப வாகனம் மற்றும் வெள்ளி மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளின் அருளைப் பெற்றனர்.

விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமார மடாலயம் சிறை ஆதீனம் குமரகுருபர சாமிகள் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும் தி.மு.க மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

Coimbatore

கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர், பெருமாள் கோவில் வீதி, ஒப்பணக்கார வீதி, மாநகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று மீண்டும் கோவிலை வந்தடையும். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு தெப்ப உற்சவம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெறவுள்ளது. மேலும், வரும் 17 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு வசந்த உற்சவம் மற்றும் 15 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் விளையாட்டு உற்சவம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க திருவிழா நடத்த அனுமதி கிடைத்த நிலையில், இன்று திரளான பக்தர்கள் பங்கேற்று சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தை மாலினி நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "இன்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்த்திருவிழா நடப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இந்த திருவிழாவை பார்ப்பதற்காக இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தோம். இனிமேல் கோவை மாநகர் முழுவதையும் இந்த சிவன் காத்தருள்வார் என்று நம்புகிறோம்" என்றார்.

இடையார்பாளையத்தைச் சேர்ந்த மேகலா பேசுகையில், "32 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு தேர்த்திருவிழா நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முருகனுக்கு சித்திரை திருவிழாவும், கோட்டை சங்கமேஸ்வரருக்கும் தேர் திருவிழா நடைபெறுவது இரட்டிப்பு சந்தோஷம். பல தடைகள், பிரச்சனைகள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தும், இன்று மக்கள் அச்சமின்றி வந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான் காரணம். கோட்டை ஈஸ்வரன் கோவை மாநகரின் சந்தோஷத்தை மீண்டும் அளித்திருக்கிறார்" என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

விழாக் கோலம் பூண்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பக்தர்களின் ஆரவாரத்தாலும், பக்தி முழக்கங்களாலும் அதிர்ந்தன. இந்த திருவிழா கோவை மாநகர மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும், ஆன்மீக எழுச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. 

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: