/indian-express-tamil/media/media_files/2025/08/31/whatsapp-image-2025-08-31-16-29-25.jpeg)
Coimbatore
கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி கோவையில் இன்று (ஆக. 31) நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் 'ஃபென்சிங்' (Fencing) எனப்படும் வாள் வீச்சு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாள் வீச்சு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில், மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டுப் போட்டி கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே நடைபெற்ற இந்தப் போட்டிகளில், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம், கோவை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வாளை ஆவேசமாக சுழற்றி சண்டையிட்டனர்.
இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்வார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர் தியாகு நாகராஜ் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.