கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வரும் 'தரங் சக்தி 2024'- சர்வதேச விமான கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சியை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
இந்திய விமானப்படை சார்பில், 61 ஆண்டுகளுக்கு பிறகு, 'தாரங் சக்தி 2024' பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்ட பயிற்சி ஆக., 6 முதல் 14ம் தேதி வரை சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கிய விமான பயிற்சியில் இந்தியாவோடு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொண்டு விமான பயிற்சி ஒத்திகைகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் typhoon உள்ளிட்ட உயர்ரக போர் விமானங்கள் பங்கேற்ற பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.
இந்த நிலையில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று சூலூர் விமானப்படைத் தளத்தில் இன்று தொடங்கியது.
இதில் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு HAL, BHEL உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள், தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.
காலை 11.30 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி இக்கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
இன்றும் நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிடுகின்றனர். விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15 அன்று, பொதுமக்கள் இக்கண்காட்சி பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய விமானப் படையினரின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய விமானப்படை தலைமை தளபதி சௌத்ரி மற்றும் பயிற்சியில் ஈடுபட்ட நாடுகளின் விமானப்படை உயரதிகாரிகள் ராணுவ மரியாதையை ஏற்று கொண்டனர். இதையடுத்து கூட்டு விமான பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படை தளபதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“