கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர், விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் ஓவியத்தை வண்ண நூல்கள் கொண்டு உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
கோவை மாவட்டம், கருண்யா நல்லூர் வயல் பகுதியை சேர்ந்தவர் ரேவதி சௌந்தர்ராஜன். இவர் தனியார் பள்ளி விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஓவியம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மரத்தூள்கள், காய்கறி, தானிய வகைகள் என பல்வேறு இயற்கை பொருட்கள் கொண்டு ஓவியம் வரைந்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓவியத்தை வண்ண நூல்கள் கொண்டு ரேவதி சௌந்தர்ராஜன் உருவாக்கியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், கடந்த மார்ச் 18-ம் தேதி வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.
இந்த சாதனையை சிறப்பிக்கும் விதமாக சுனிதா வில்லிம்ஸின் ஓவியத்தை சுமார் 15 மணி நேரத்தில் வண்ண நூல் கொண்டு அவர் உருவாக்கியுள்ளார். அதன்பேரில் ரேவதி சௌந்தர்ராஜனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.