/indian-express-tamil/media/media_files/2025/06/10/xOFFth0BtxnX0zQc1E6x.jpg)
இந்த பாதிப்புகள் இருந்தால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
குளிர்ந்த நீரில் குளிப்பதால் அழற்சியைக் குறைத்தல், அரிப்புள்ள சருமத்தை ஆற்றுப்படுத்துதல் மற்றும் எண்டோர்பின்களின் வெளியீட்டின் மூலம் ஆற்றலை அதிகரித்தல் போன்ற பல நன்மைகள் இருந்தாலும், அவை அனைவருக்கும் ஏற்றதல்ல. சில மருத்துவ நிலைகள் (அ) பாதிப்புகள் உள்ள நபர்களுக்கு, இந்தப் பழக்கம் குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்.
மும்பையில் உள்ள க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகரான மஞ்சுஷா அகர்வால், நீரிழிவு (அ) சுவாசப் பிரச்னைகள் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் தினமும் குளிர்ந்தநீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்களுக்கு, குளிர்ச்சியான சூழல் அறிகுறிகளை மோசமாக்கலாம் அல்லது குணப்படுத்தும் செயல்முறையை மெதுவாக்கலாம். எனவே, தொடர்ந்து குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இருதய நோய்கள் உள்ள நபர்கள்:
குளிர்ந்த நீரில் குளிப்பது ரத்த நாளங்களில் திடீர் சுருக்கத்தை ஏற்படுத்தி, ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கும். கரோனரி தமனி நோய் (coronary artery disease) அல்லது இதய செயலிழப்பு (heart failure) போன்ற இதய நோய் உள்ளவர்களுக்கு, இது அவர்களின் நிலையை மோசமாக்கி, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
டெல்லியில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத் துறையின் முன்னணி ஆலோசகரான டாக்டர் நரேந்திர சிங்லா, உயிருக்கு ஆபத்தான இந்தச் சிக்கல்களைத் தடுப்பதற்காக, இருதய நோய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக டாக்டர் சிங்லா குறிப்பிடுகிறார். குளிர்ந்த நீரின் அதிர்ச்சியானது ரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும், இது ஏற்கனவே உயர் ரத்த அழுத்த அளவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு, பக்கவாதம், மாரடைப்பு அல்லது பிற இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.
பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள்:
பக்கவாதம் அல்லது பெருமூளை ரத்தநாள நோய்களின் (cerebrovascular diseases) வரலாறு கொண்டவர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சிங்லா கூறினார். திடீர் வெப்பநிலை மாற்றம் ரத்த அழுத்தத்தில் ஒரு கூர்மையான உயர்வை தூண்டுவதன் மூலம் மீண்டும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இந்த காரணத்திற்காக, பக்கவாதத்திலிருந்து மீண்டவர்கள், குளிர்ந்த நீரில் குளிப்பதை தங்கள் வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன்பு, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
ரேனாட் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள்:
ரேனாட் நோய் என்பது விரல்கள் மற்றும் கால்விரல்கள் போன்ற உடலின் நுனிப் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்கள், குளிருக்கு எதிர்வினையாக அதிகமாகச் சுருங்குவதற்குக் காரணமான ஒரு நிலையாகும். ரேனாட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குளிர்ந்த நீர் வெளிப்பாடு கடுமையான வலி, உணர்வின்மை மற்றும் அதீத அசௌகரியத்தை ஏற்படுத்தும். டாக்டர் சிங்லா சுட்டிக்காட்டுவது போல, குளிர்ந்த நீரில் குளிப்பது இந்த அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும் என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.
வயதானவர்கள்:
வயதானவர்களின் உடல் வெப்பநிலையைச் சீராக்கும் திறன் பொதுவாகக் குறைவாக இருப்பதால், அவர்கள் இருதய நோய்களின் அபாயங்கள் மற்றும் உடல் வெப்பநிலை குறைதல் (hypothermia) போன்ற பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகக்கூடும். டாக்டர் சிங்லாவின் அறிவுரைப்படி, முதியவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உடலுக்கு ஏற்படும் திடீர் அதிர்ச்சி, இதயச் சிக்கல்கள் அல்லது தலைச்சுற்றல் காரணமாக கீழே விழும் அபாயத்தை அதிகரிப்பது போன்ற பாதகமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கக் கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.