/indian-express-tamil/media/media_files/2025/09/26/whatsapp-image-2025-09-2025-09-26-17-34-58.jpg)
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடலில் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறையினர் 8 பேர் உட்பட 20 பேர் கடலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மூவேந்தர் காலம் சங்க இலக்கியம் மற்றும் காப்பியங்களின் மூலம் மிகப்பெரிய கடல் வணிக துறைமுகமாக அறியப்படுகிறது. காவேரி பூம்பட்டினமாக இருந்த பூம்புகாரில் பண்டைய தமிழர்களின் நாகரீகத்தின் தொன்மையை ஆராயும் விதமாக இந்திய கடல்சார் பல்கலைக்கழக உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஒருவாரமாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் கடலுக்கு அடியில் தொல்லியல்துறை கல்வி, கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தமிழ்நாடு தொல்லியல்துறை அலுவலர்கள் உட்பட 20 பேர் கொண்ட வல்லுநர் குழுவினர், கரையில் இருந்து 5.5 கி.மீ. தூரத்தில் 22 மீட்டர் ஆழத்தில், 7 நாட்களாக ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் தமிழர்களின் பழைய சுவடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வணிக நகரம் அமைந்ததற்கான கட்டிடங்கள் கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
இந்தியக் கடல்சார் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல்துறை இணைந்து இந்த கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து மேலும் பல ஆய்வுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இதற்கு முன்னரே 1980-களில் எஸ்.ஆர்.ராவ் தலைமையிலான தொல்லியல்துறை மற்றும் என்.ஐ.ஓ. ஆகியவை இணைந்து கடலுக்கு அடியில் ஆய்வு செய்தன. அந்த ஆய்வில் கடலுக்கு அடியில் பல கட்டுமானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆழ்கடல் ஆய்வு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும். இதன் மூலம் சோழர்கள் மற்றும் மற்ற அரசர்கள் எப்படி கடல் வணிகம் செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் தமிழ்நாட்டின் அருங்காட்சியகங்களில் வைக்கப்படும். இதனால் மக்கள் தமிழ்நாட்டின் பழமையான வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.