பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பிரதான உணவாக இருக்கும் தயிர், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. தயிர் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, வலுவான எலும்புகளை உருவாக்குகிறது, சருமத்தை மேம்படுத்த உதவுகிறது, மேலும் உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
Advertisment
வீட்டில் நீங்களே செய்யும் தயிருக்கு சுவை அதிகம். வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் அதிக கிரீம் மற்றும் ஃபிரெஷாக இருக்கும். ஆனால் பலருக்கு வீட்டில் எப்படி தயிர் செய்வது என்று தெரியாது. தயிர் தயாரிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லை, அதற்கான சில நுணுக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உறை மோர் இல்லாமல் வீட்டிலேயே எளிதாக தயிர் செய்யக்கூடிய டிப்ஸ்களை இன்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
* நன்றாக காய்ச்சி ஆற வைத்த பாலில், இரண்டு பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் அப்படியே போட்டு விடுங்கள். அடுத்த நாள் பார்க்கும் போது தயிர் நன்றாக உறைந்திருக்கும். உறை ஊற்ற வேண்டிய அவசியமே இல்லை.
* ஒருவேளை பச்சை மிளகாய் இல்லையென்றால், ஒரு துண்டு இஞ்சி எடுத்து நன்றாக தோல் சீவி, கழுவி அதையும் காய்ச்சிய பாலில் போடலாம். இப்படி செய்தாலும் பால் நன்றாக உறைந்து இருக்கும்.
* அதேபோல், பாலில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடலாம். ஆனால் பால் சூடாக இருக்கக் கூடாது. இல்லையெனில் பால் திரிந்து விடும்.
* பால் ஓரளவு மிதமான சூட்டில் இருக்கும் போதே மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றவும். கோடையில் தயிர் செட் ஆக 6- 7 மணி நேரம் ஆகும். அதே நேரத்தில், குளிர்காலத்தில் தயிர் செட் ஆக, 10- 12 மணிநேரம் தேவைப்படுகிறது.
தயிர் உறைந்த பிறகு, அதை ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு பயன்படுத்தவும். இது உங்கள் தயிரை கெட்டியாகவும், சுவையாகவும் மாற்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“