நான் வேலை செய்துகொண்டிருந்தபோது எனக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர் கூறுகிறார். நம்மில் பலர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீடுகளிலே முடங்கிக்கிடக்கின்றோம். ஆனால், அந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடிய முன்னணி பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோரின் பணிகளை நாம் மதிக்க வேண்டும். இந்த நெருக்கடி காலத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இந்த தொற்றிலிருந்து மீண்ட ஒரு மருத்துவரை தொடர்புகொண்டது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த, டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அருண் கோலி, என்ன கூறுகிறார் என்பதை அவரின் வார்த்தைகளிலேயே இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஒரு பயிற்சி செய்து வரும் மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணரான நான், தினமும் பல நோயாளிகளை சந்தித்து வருகிறேன். அவர்களுக்கும் சளி, இருமலுடன் தான் வந்தார்கள். அவர்களை வரவேண்டாம் என்றும் கூற முடியாது. நான் இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருக்கும்போதுதான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது. எங்கள் பகுதியில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்களை கண்காணித்து வரும் பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு, சாத்தியமுள்ள நோயாளிகளின் தகவல்களை ஏற்கனவே அளித்திருந்தேன்.
மார்ச் 25ம் தேதி, ஒரு ஆய்வகத்தில் என்னை நான் பரிசோதித்துக்கொண்டேன், அதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. அது முற்றிலும் எதிர்பாராதது. ஏனெனில் எனக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை. தற்போது அதிகளவில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களிடம் காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எனக்கு ஜனதா ஊரடங்கு அனுசரிக்கப்பட்ட மார்ச் 22ம் தேதியும், அதற்கு அடுத்த நாளிலும் சளி, இருமல் ஏற்பட்டது. அதற்கு நான் சாதாரண வைரஸ் சிகிச்சையை மேற்கொண்டேன், பின்னர் அது தானாகவே குணமாகிவிட்டது. ஆனால், டாக்டரான எனது மனைவிதான் என்னை இந்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தினார்.
மார்ச் 27ம் தேதி நான் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். அடுத்த இரண்டு நாட்களில் எனது சுய விருப்பத்தின் பேரில் புது டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு ஏப்ரல் 15ம் தேதி வரை இருந்தேன். அங்கு வழக்கமான கோவிட் சிகிச்சையளிக்கப்பட்டது. அசித்ரோமைசீன் மாத்திரைகளும், வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகளும் கொடுக்கப்பட்டது. உணவு, வழக்கமாக மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் உணவுதான், ஆனால் புரதச்சத்து நிறைந்த உணவு அளிக்கப்பட்டது. பன்னீர் மற்றும் தயிர் சேர்த்த சைவ உணவுகள் தான் முதலில் வழங்கப்பட்டது. பின்னர் உணவியல் வல்லுனரின் அறிவுரைப்படி, அசைவ உணவு மற்றும் முட்டையும் எனக்கு வழங்கப்பட்டது.
முதலில் என்னை கொரோனா வார்டில் வைத்திருந்தார்கள். அடுத்த இரண்டு பரிசோதனை முடிவுகளுமே தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியதால், கொரோனா தொற்று இல்லாதவர்கள் வார்டுக்கு மாற்றப்பட்டேன். அங்கு நான் ஒரு வாரம் இருந்தேன், பின்னர் 15 மற்றும் 16வது நாட்களில் மேலும் இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பரிசோதனை முடிவுகளிலுமே கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதால் என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். மேலும் 14 நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்த ஊரடங்கு முடியும் மே 3ம் தேதி வரை நான் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்று எங்கள் பகுதி கொரோனா பொறுப்பு அதிகாரி கூறினார். மருத்துவமனையும், ஏதேனும் அவசரம் ஏற்பட்டால், தொடர்புகொள்ள வலியுறுத்தி தொடர்பு எண்களை கொடுத்துள்ளனர். நான் தனிமையை கடைபிடிப்பதை முறையாக செய்கிறேன். எனது குடும்பத்தினரிடம் இடைவெளியை கடைபிடிக்கிறேன். நாங்கள் ஒரே வீட்டில், தனித்தனி அறைகளில் இருக்கிறோம். இதற்கிடையில் எனது மனைவி, மகன், எங்கள் வீட்டின் பணியாளர் ஆகிய அனைவருக்கும் பரிசோதித்துவிட்டோம். நல்ல வேளை அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. அவர்களும் நான் பரிசோதனைக்கு சென்ற நாளில் இருந்து தனிமையில் இருந்தனர்.
இப்போது நான் தனிமையில் இருக்கிறேன். எனது நேரத்தை மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகளைப்பற்றிய கட்டுரைகளை, இணையதளத்தில், படித்து தெரிந்துகொள்வதில் செலவிடுகிறேன். பல்வேறு மருத்துவர்களுடன் கலந்துரையாடுகின்றேன். உடலளவிலும் சுறுசுறுப்பாக உணர்வதும் முக்கியம் என்பதால், என் அறைக்குள்ளேயே நடந்துகொள்கிறேன். மற்ற நேரங்களில் பாடல் கேட்கிறேன் அல்லது டிவி பார்க்கிறேன்.
எனது அறையில் நான் மட்டும் தனியாக இருக்கும்போது முகக்கவசம் அணிவதில்லை. எப்போதாவது எனது குடும்பத்தினருடன் பேசும்போது, குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தாலும் கட்டாயம் அணிகிறேன். அவர்களும் முன்னெச்சரிக்கையான முகக்கவசம் அணிந்துகொள்கின்றனர்.
மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு, ஒவ்வாமைக்கு எதிரான மாத்திரைகளும், வைட்டமின் சி மாத்திரைகளையும் பரிந்துரைத்துள்ளார்கள். மற்றபடி, நான் நன்றாகவே இருக்கிறேன். வீட்டிற்கு திரும்பியதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன்.
கொரோனாவை எதிர்த்து போராடி வருபவர்களுக்கும், முன்னணி ஊழியர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர்களை காப்பாற்றி கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அவர்கள் முதலில் எடுக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்துவேன். கொரோனா பாதித்தவர்களை பாகுபடுத்தி பார்க்காதீர்கள் என அனைவரிடமும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தினர் மீதும் கருணை காட்டுங்கள். ஏனெனில், கோவிட்டால் பாதிக்கப்பட்டு குணமாகி வருபவர்களுக்கு, அவர்களின் குடும்பம் நன்றாக நடத்தப்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்காது.
தமிழில் : R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.