சென்னையை சேர்ந்த ரதீஸ் எஸ் என்பவர், எளிமையான வகையில் காதுகளைப் பாதுகாக்கும் வகையில் காட்டன் துணியில் ஒரு பொருளைத் தயாரித்திருக்கின்றார். இதனை முக கவசத்துடன் இணைத்துப் பயன்படுத்த வேண்டும்.
ஜெயஸ்ரீ நாராயணன்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முக கவசம் அணிவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நீண்ட நேரத்துக்கு முக கவசம் அணிந்திருப்பதால், காதுகளில் வலி ஏற்படும். தோலில் வடுக்களும் ஏற்படும். குறிப்பாக காதுகள் பாதிக்கப்படும். முக கவசத்துடன் உள்ள எலாஸ்டிக்கை இழுத்து காதின் பின்புறத்தில் மாட்டும்போது அந்தப் பகுதியில் தோல் பிய்ந்து போகலாம். இதனை காது சோர்வு அல்லது காது வலி என்று சொல்லலாம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எளிமையான நீடித்திருக்கக் கூடிய புதுமையான ஒன்றை முக கவசத்தில் இணைப்பதன் மூலம் தன்னார்வ அமைப்புகள், சுகாதார அமைப்பினர் தனிநபர்கள் முக கவசத்தை வசதியாக அணிய முடியும். இந்த எளிய காது பாதுகாப்பு அவர்களின் காதுகளுக்கு நல்லது.
இந்த முயற்சி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் பேசிய சென்னையைச் சேர்ந்த ப்ரக்ருதி பொருட்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ரத்தீஸ் எஸ், “சுகாதாரத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் என்று கொரோனா களத்தில் முன்னணியில் பணியாற்றுபவர்கள் இறுக்கமான எலாஸ்டிக் கயிறு சேர்க்கப்பட்ட முக கவசங்கள் காரணமாக பிரச்னைகளை சந்தித்து வந்ததாக அண்மையில் ஒரு செய்தி படித்தேன். அதன் பின்னர்தான் இந்த பொருளை வடிவமைத்தேன். நாம் வெளியிடங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றோம். நான் முக கவசம் ஒன்றை பல மணி நேரம் அணிந்திருந்தபோது காது வலிப்பதை உணர்ந்தேன். எனக்கே இருப்படி இருக்கும்போது களத்தில் முன்னணியில் இருந்து பணியாற்றுவோருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அவர்கள் பலர் தங்கள் காது வலிகளையும் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து கடமைகளை செய்து வருகின்றனர் என்று உணர்ந்தேன். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்றார்.
“இதன் பின்னர் காதுவலியை தடுக்கும் முறைகள் குறித்து நான் இணையதளத்தில் தேடி பார்த்தேன். சில பிளாஸ்டிக் மறும் கம்பளி இணைக்கப்பட்ட முக கவசங்களைப் பார்த்தேன். அவற்றைத் தயாரிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். அவை சர்வதேச சந்தையில் மட்டுமே கிடைக்கும் பொருட்களாக இருந்தன. ப்ரக்ருதி நிறுவனத்தில் எப்போதுமே சூழலுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். காட்டன் துணியில் ஒரு எளிய முன்மாதிரி ஒன்றை உருவாக்கினோம். அதிக தேவை எழுந்தாலும் கூட நம் உள்ளூர் சந்தையிலேயே இந்தப் பொருள் கிடைக்கும். அதை வைத்து அதிகமாக தயாரிக்க முடியும். அதே நேரத்தில் சில ஆராய்ச்சிகளில் துணிகளை விடவும் பிளாஸ்டிக் பொருட்களில் நோய்கிருமிகள் அதிக காலத்துக்கு உயிரோடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது,” என்று மேலும் அவர் கூறினார்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய அறுவை சிகிச்சைக்கான முக கவசங்கள் அல்லது எந்த ஒரு முக கவசத்துடனும் காதுகளில் மாட்டக் கூடிய எலாஸ்டிக்கில் இணைத்து இந்த முன்மாதிரியை பயன்படுத்த முடியும். இறுக்கமான வசதியற்ற முக கவசங்களில் இருந்து இது காதுகளை, தோல்களை பாதுகாக்கும். “இந்த காது பாதுகாப்புப் பொருள் அழுத்தத்தைக் குறைக்கும். முக கவசத்துடன் இணைந்துள்ள எலாஸ்டிக்கை இழுத்து காதுகளில் மாட்டுவதற்கு பதில் இந்த காது பாதுகாப்பு துணியை இணைத்து தலையின் பின்புறத்தில் மாட்டிக்கொள்ளலாம். இது உங்கள் காது அழுத்தத்தை முற்றிலும் குறைக்கும். எந்தவித பிரச்னையும் இன்றி வேலைகளைச் செய்யலாம்,” என்றார் ரத்தீஸ்.
ஒவ்வொருவரின் வசதியைப் பொருத்து இந்த காதுபாதுகாப்பை தலையின் பின்புறம் வருவது போல மாட்டிக் கொள்ளலாம். அல்லது தலையின் ஓரத்தில் வருவதுபோலவும் மாட்டிக் கொள்ளலாம்.
இதே போன்ற பொருள் உலகில் சில இடங்களில் கிடைக்கின்றன. முழுவதுமாக மறு சுழற்சி செய்யும் வகையில் நீடித்திருக்கும் வகையில் இந்த பொருளை ரத்தீஸ் உருவாக்கி உள்ளார். “அவர்கள் 100 சதவிகிதம் பருத்தியால் ஆன இழையில் உருவாக்கி இருக்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. மறு சுழற்சி செய்ய முடியும், இந்தியாவில் வீட்டில் உருவாக்கப்பட்டது. இந்த காது பாதுகாப்பு பொருளை எளிதாக துவைத்து மீண்டும் உபயோகிக்க முடியும். இது சூழலுக்கு கேடு விளைவிக்காது. பல முறை உபயோகித்த பின்னர் எளிதாக இதனை அப்புறப்படுத்த முடியும்,” என்றார்.
ரத்தீஸ் ப்ரக்ருதிபொருட்கள் நிறுவனத்தை கடந்த 2018-ம் ஆண்டு சென்னை பல்லாவரம் பகுதியில் தொடங்கினார். சூழலுக்கு கேடு விளைவிக்காத பேப்பர் பைகள், மறு சுழற்சி செய்யப்படக் கூடிய கைவினைப் பொருட்களையும் உருவாக்கி விற்பனை செய்து வருகின்றார்.
ஒரு சிறு குழுவுடன் இயங்கி வரும் ரத்தீஸ், தங்களது முயற்சியால் அமைப்புகள், தனிநபர் தொடர்புகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்து வருகிறார். “மின்னஞ்சல்கள் மூலம் மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டு வருகின்றோம். எங்களுடைய காது பாதுகாப்பு பொருட்களை கொடுப்பதற்காக அவர்களிடம் இருந்து சாதகமான பதில்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இப்போது, மாதிரிக்காக குறைவான அளவில் உற்பத்தி செய்து வைத்திருக்கின்றோம். பெரும் அளவில் தேவை எழுந்தால், எங்களுடைய குழுவைக் கொண்டு மேலும் அதிகமாக உற்பத்தி செய்வோம்,” என்றார்.
விசாரணைகள் மற்றும் ஆர்டர்களுக்கு தொடர்பு கொள்ள 9940593329 அல்லது ask.prakruthi@gmail.com
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.