கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக உணவு தேடி ஆக்ரோசமாக சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அப்பகுதி வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.
வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியான பூண்டி ஆண்டவர் கோவில் பகுதியில் தொடர்ந்து உணவு தேடி அங்கு வரும் காட்டு யானையை தடுக்கவும், வனப் பகுதிக்குள் விரட்டவும் நரசிம்மன் என்ற கும்கி யானை நிறுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடாகம் பகுதி அருகே உள்ள காளையனூர் பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் வீட்டில் நேற்று இரவு உணவு தேடி நுழைந்த ஒற்றைக் காட்டு யானை காம்பௌண்ட் சுவரை சேதப்படுத்தி சென்றது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் அந்த யானையை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.