கோவையில் உலக செவிலியர் தின வாரத்தை முன்னிட்டு உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும்,ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாகவும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும்,நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் உலக செவிலியர் தின வாரத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக செவிலியர்கள் அனைவரும் பலூன்களை பறக்கவிட்டு செவிலியர் தினத்தை கொண்டாடினர். தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பக்கவாதம், முதலுதவி சிகிச்சை, உடல் ஆரோக்கியம் பதாகைகள் ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டும், நடனமாடியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்