கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பின, சிறுவாணி அணையின் நீர்மட்டம் 37.10 அடியாக வேகமாக உயர்ந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்து உள்ளனர். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறவும் பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்றுடன் தேதி முடிவடைகிறது.
மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறையினர் பொதுமக்களை அறிவித்து உள்ளனர்.
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சித்திரைச்சாவடி, குனியமுத்தூர் புட்டுவிக்கி, உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளலூர் தரைப் பாலத்தை மூழ்கடித்த படி நொய்யல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதைத் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் ராஜாவாய்க்கால் மூலம் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் மள மளிவென்று உயர்ந்து வருகிறது.
இதில் கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், இருகூர் குளம் ஆகிய 6 குளங்கள் முழுவதும் நிரம்பி விட்டது. அதில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. பேரூர் பெரியகுளம், வாலாங்குளம், உக்கடம், நீலாம்பூர் குளம், சூலூர் பெரியகுளம், சூலூர் சின்னகுளம் ஆகிய குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது.
கோடை காலத்தில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட கோளராம்பதி குளம் தற்பொழுது தண்ணீர் நிரம்பி வருகிறது. சொட்டையாண்டி குட்டை மற்றும் கங்கா நாராயண சமுத்திரம் ஆகிய குளங்களில் தண்ணீர் உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் இந்த குளங்களும் நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக இருந்தது. நேற்று 34.80 அடியாக காணப்பட்டது. இதை அடுத்து இன்று அதிகாலை 8 மணி நிலவரப்படி 37.10 அடியாக உயர்ந்து உள்ளது. 49 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணை பாதுகாப்பு கருதி 45 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அதிகாரிகள் அனுமதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சுமார் 17 அடிக்கு மேல் உயர்ந்து உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.