2025 ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். அதேபோல கோவையில் பல்வேறு இடங்களில் ஆடல், பாடல், பறை இசை, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் என புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்றனர்.
இந்நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகள் நடைபெற்றது. அதில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், அதிவேகமாகவும் சத்தத்துடன் இயக்கிய வாகனங்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இரவு 12 மணி அளவில் வான வேடிக்கைகள் வெடித்து பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது காந்திபுரம் பகுதியில் காவல்துறை சோதனையில் சிக்கிய இளைஞர்கள் வாகனத்தின் சாவிகளை கொடுத்துவிட்டு புத்தாண்டு வந்து விட்டது சாவியை கொடுங்கள் என காவல்துறையிடம் கெஞ்சி அங்கும், இங்குமாக அலைந்து கொண்டு இருந்தனர்.
காந்திபுரம் சிக்னலில் காவல்துறை சார்பில் டென்ட் அமைக்கப்பட்ட முகாம் இருந்தது. வாகன சோதனையில் சிக்கும் நபர்களை அமர வைக்க இருக்கைகளும் இருந்தன. அங்கு வேகமாக வாகனங்கள் இயக்கி வந்த இளைஞர்களை பிடித்து அங்கு அமர வைத்து பல்வேறு போட்டிகளும் நடத்தினர்.
மேலும் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மது போதையில் வாகனங்கள் ஓட்டக் கூடாது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அதேபோல சிவானந்தா காலனி புது பாலம் பகுதியில் நடு ரோட்டில் இரு சக்கர வாகனங்களை நிறுத்திய சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு சென்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் வீடுகளுக்கு செல்லும்போது திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞரை வழிமறித்து தாக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவமும் அரங்கேறியது.
கோவை ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், அவிநாசி சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல நேரம் காத்து இருந்து ஊர்ந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகம் முன்பு தமிழர்களின் பாரம்பரிய கலையான பெண்களின் பறை இசை முழுங்க ஆட்டம் பாட்டத்துடன் கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகம் முன்பு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழர்களின் பாரம்பரிய கலையான பெண்களின் பறை இசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நள்ளிரவு 12 மணி அளவில் கேக் வெட்டி பரிமாறிக் கொண்டு புத்தாண்டை கொண்டாடினர்.
மேலும் கிறித்துவ தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு யேசுவின் முன்னால் மண்டியிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
இதனையடுத்து இப்பேராலயத்தின் தென் மண்டல பேராயர் தாமஸ் அக்வினாஸ் திருப்பலி நிகழ்ச்சியை நடத்தியதுடன் புதிதாக பிறந்து இருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் நோய் நொடியின்றி எல்லா வளமும் நலமும் பெற்று இருக்க வேண்டுமென்று கூறி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“