சீனா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஒரு வருடத்திற்கு பிறகு முதல் முறையாக ஒரு ஆபத்தான புதிய மாறுபாடு உருவாகி உள்ளதால், பூஸ்டர் ஷாட் எடுக்காதவர்கள், அதை முன் வந்து எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
புதன்கிழமை, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், இந்திய மக்கள் தொகையில் 27-28 சதவீதம் பேர் மட்டுமே இன்றுவரை பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தும் வகையில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
டெல்லியின் சாகேட்டில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இன்டர்னல் மெடிசின் இயக்குனர் டாக்டர் ரோம்மெல் டிகூவின் கூற்றுப்படி, பூஸ்டர் ஷாட்களை எடுப்பது முக்கியம், தகுதியுடையவர்கள் அதை எடுக்க வேண்டும். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அரிதாகவே உள்ளது, ஆனால் இந்தியாவில் துணை மாறுபாடு கண்டறியப்பட்டதன் மூலம் எந்த நேரத்திலும் ஒரு எழுச்சி ஏற்படலாம்.
ஜப்பான், சீனா, பிரேசில், கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கவனிக்கும் போது, கடந்த காலத்தில் இருந்ததை போல இந்த பாதிப்பு உயரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நான் நினைக்கிறேன். ஆனால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. அதனால், நாம் புதிய மாறுபாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
எனவே, பூஸ்டருக்குத் தகுதியுடையவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டும், ஒருவர் பயணம் செய்துகொண்டிருக்கலாம், நோய்த்தொற்று உள்ளவரை சந்திக்க நேரிடலாம், எனவே ஒருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி உங்களுக்கு தீங்கு விளைவிக்காது, எனவே அதை எடுக்க வேண்டும், என்றார்.
இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டும், ஏனென்றால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு வேலை செய்யும், அதனால் பூஸ்டருக்கு அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் மூன்று மாதங்கள் காத்திருந்து பின்னர் எடுத்துக் கொள்ளலாம், என்று டாக்டர் டிகூ கூறினார்.
இணை நோய் உள்ளவர்கள் மற்றும் எந்தவிதமான நோய்த்தொற்று இல்லாதவர்களும் பூஸ்டர் தடுப்பூசி எடுக்க வேண்டும். ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஒருவர் ஆன்டிபாடிகளை இழக்க நேரிடும் என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால் ஒருவருக்கு இயற்கையாக தொற்று ஏற்பட்டால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், என்று டாக்டர் டிகூ மேலும் கூறினார்.
இந்தியாவில் மிகச் சிறப்பாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதாலும், பெரும்பாலான மக்கள் குறைந்த பட்சம் ஒரு ஷாட் எடுத்திருப்பதாலும், எந்த மாறுபாடாக இருந்தாலும், நமக்கு சில பாதுகாப்பு இருக்கும், என்று அவர் மேலும் கூறினார்.
டாக்டர் விகாஸ் மௌரியாவின் கூற்றுப்படி, பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்வது நமக்கு ஒரு நன்மையாக இருக்கும். நம் மீது ஒரு அச்சுறுத்தல் உள்ளது, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நோய்த்தொற்று நமக்கு ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துள்ளது, ஆனால் கடைசி டோஸ் எடுத்து, இப்போது வரை நிறைய இடைவெளி வந்துவிட்டது, எனவே பூஸ்டர் ஷாட்களை எடுக்காதவர்கள் முன் வந்து அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் முதியவர்கள், மக்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய உத்தி உருவாக்கப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“