செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் வசிப்பவர் மனோகர், கட்டிட தொழில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரக்ஷயா. கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது கனவு.
ஆனால் குடும்ப சூழ்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் ரக்ஷயா தனது கனவை விடவில்லை. பெற்றோர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலம், ரக்ஷயா படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்து, அழகிப்போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு படியாக தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார்.
தனது விடாமுயற்சியால், 2018-ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில், ரக்ஷயா கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 'Forever Star India Awards' நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் பங்கேற்று தேர்வானார்.
அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 18 முதல் 21 ஆம் தேதி வரை, தேசிய அளவிலான அழகிபோட்டி நடந்ததுது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அழகிகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில், ரக்ஷயா கலந்து கொண்டு ’மிஸ் தமிழ்நாடு 2022’ பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வின்னர், ரன்னர் என்று சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர். இவர்கள், வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இதில் வெற்றி பெறுவர் 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்று மகுடம் சூடுவார்.
சிறுவயது முதலே, அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ரக்ஷ்யா, நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“