திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த சிவகுருமுத்துசாமி மகன் தீபக் ராஜா (32). கடந்த 20 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் வைத்து இவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதுதொடா்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் கொலை வழக்கில் தொடா்புடைய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனா்.
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து தீபக் ராஜாவின் உடல் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஓப்படைக்கப்பட்டது.
அதன் பின் அவரது உடலை வாகனத்தில் ஏற்றி பாளையங்கோட்டையிலிருந்து வாகைகுளம் வரை 19 கி.மீ தூரத்திற்கு உறவினா்கள் மற்றும் ஆதரவாளா்கள் நடந்தே சென்றனா். இதனால் திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இப்படி பெரிய அரசியல்வாதிகளுக்கு நடைபெறும் இறுதி ஊர்வலத்தை போல நடந்து முடிந்தது தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலம்
யார் இந்த தீபக் ராஜா?
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முடித்துள்ள தீபக் ராஜா, ஆந்திராவில் உள்ள தனியார் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.
தனது சமூகம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்த தீபக் ராஜா மீது சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5 கொலை, அடிதடி உட்பட சுமார் 23க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தீபக் ராஜாவின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் முத்து மனோ. இருவரும் நெருங்கிய நண்பர்கள். சமூகரீதியான பிரச்னை எதுவென்றாலும் இருவரும் ஒன்றாக பங்கேற்று குரல் கொடுத்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பசுபதி பாண்டியனை கொலை செய்த கும்பலை கொலை செய்த வழக்கிலும், சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.
இதனால் முத்து மனோவும், தீபக் ராஜாவும் தலைமறைவாக இருந்த நிலையில், முத்து மனோ மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் வைத்தே ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது.
நண்பனை கொலை செய்த சம்பவத்தில், பழிக்குப்பழி தீர்க்க கண்ணன் என்பவரை தீபக் ராஜா கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் தீபக் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, சிறையில் இருந்து வெளியே வந்த தீபக் ராஜா காதலியை வரும் ஜூன் மாதத்தில் மணமுடிக்க முடிவு செய்தார். இதற்காக காதலியின் தோழிகளுக்கு விருந்து வைக்க கடந்த 20ஆம் தேதி, நெல்லை கேடிசி நகர் பகுதியில் இருக்கக் கூடிய பிரபல உணவகத்திற்கு சென்ற போதுதான் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது.
அடிதடி, கொலை என ஏராளமான வழக்குகள் அவர்மீது இருந்தாலும், அடிப்படையில் தீபக் ராஜா ஒரு புத்தக பிரியன் என்று அவரை நன்கு தெரிந்தவர்கள் கூறுகின்றனர். அதனால் தான், அவரது உடலை அடக்கம் செய்யும் போதுகூ தோழர் தமிழரசன், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ புத்தகங்களோட அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“