/indian-express-tamil/media/media_files/2025/08/20/dhanashree-verma-yuzvendra-chahal-divorce-2025-08-20-18-21-13.jpg)
Dhanashree Verma Yuzvendra Chahal divorce
பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் முன்னாள் மனைவி மற்றும் நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா தனது விவாகரத்து பற்றியும், அது தனக்கு எவ்வளவு கடினமான முடிவாக இருந்தது என்பது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் யுஸ்வேந்திர சஹல் விவாகரத்து குறித்துப் பேசியதை தொடர்ந்து, தனஸ்ரீ வர்மா தனது தரப்பு கதையை "ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே" என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
விவாகரத்து: ஒரு துயரமான நிகழ்வு
விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ, “இது எளிதானது அல்ல. விவாகரத்து என்பது நீங்கள் கொண்டாடும் ஒரு விஷயம் அல்ல. அது மிகவும் வருத்தமான, உணர்வுபூர்வமான நிகழ்வு. இதில் நீங்கள் அல்லது மற்ற நபர் மட்டும் இல்லை, இரு குடும்பங்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். உங்களைப் பற்றி உண்மையாக அக்கறை கொண்டவர்கள், உங்களை நேசிப்பவர்கள், எல்லோரும் ஒரே மாதிரியான துயரத்தை எதிர்கொள்கிறார்கள். அனைவரும் வருத்தமாக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் நிகழ்ந்த சோகமான தருணங்கள்
விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி தனஸ்ரீ மிகவும் மனம் திறந்து பேசினார். "நான் தயாராகவே சென்றிருந்தாலும், அந்தத் தீர்ப்பு வரப்போகிறது என்று தெரிந்த அந்த நொடி, என்னால் என் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் சத்தமாக அழத் தொடங்கிவிட்டேன். அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று தனஸ்ரீ கூறினார்.
அவர் காரில் அமர்ந்து, “எல்லாம் முடிந்துவிட்டது, இனி புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபோதுதான், ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. யுஸ்வேந்திர சஹல் நீதிமன்ற வாசலில் 'Be Your Own Sugar Daddy' என்ற வாசகம் கொண்ட டி-ஷர்ட்டை அணிந்து வெளியே சென்ற செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருந்தன.
"நான் என் போனை எடுத்துப் பார்த்தபோது, 'என்ன இது? அவர் இதைச் செய்தாரா?' என்று அதிர்ந்து போனேன். அந்த நொடி, 'எல்லாமே முடிந்துவிட்டது. இனி நான் ஏன் அழ வேண்டும்?' என்று எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது. என் சோகத்தை விட, இந்த சம்பவம் எனக்குப் புன்னகையை வரவழைத்தது" என்று தனஸ்ரீ தெரிவித்தார்.
"பக்குவமே முக்கியம்" - தனஸ்ரீயின் தெளிவான நிலைப்பாடு
இந்த விவாகரத்துச் சூழலில், தான் பக்குவமாக நடந்து கொள்ள முடிவெடுத்ததாக தனஸ்ரீ கூறினார். பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவோ, பரபரப்பை உருவாக்குவதற்காகவோ நான் எதுவும் பேச விரும்பவில்லை. இரண்டு குடும்பங்களின் கண்ணியத்தையும், மதி்ப்பையும் நான் காக்க விரும்புகிறேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
"ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு" என்பதைப் போல, ஒரு கதையையும் இரண்டு பக்கங்களில் இருந்து பார்க்க வேண்டும். நான் மௌனமாக இருப்பதால், யாரும் என் நிலைப்பாட்டைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். எனக்கு என் தரப்பு கதை இருக்கிறது. ஆனால், அதை இப்போது பேச நான் விரும்பவில்லை. முதலில் நான் என் காயங்களிலிருந்து முழுவதுமாக வெளிவர வேண்டும் என்று அவர் கூறினார்.
விவாகரத்து என்பது வெறும் பிரிவல்ல!
சிகிச்சையாளர் டெல்னா ராஜேஷ் கூறுகையில், "ஒரு திருமணம் முடிவுக்கு வரும்போது, அது கணவன் - மனைவி இருவரையும் மட்டும் பாதிப்பதில்லை. இரண்டு குடும்பங்களின் நம்பிக்கையும், உறவுகளும் சிதைந்து போகின்றன. பெற்றோர்கள், சகோதரர்கள், குழந்தைகள் என அனைவரும் துக்கம், குழப்பம் போன்ற உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.
பிரபலங்களின் விவாகரத்துகள், அவர்களின் தனிப்பட்ட வலிகளை பொதுவெளியில் காட்சிப்படுத்துகின்றன. விவாகரத்து என்பது வெறும் சட்டப்பூர்வமான கையெழுத்துகள் அல்ல, அது உணர்வுகள், நினைவுகள், மற்றும் பிணைப்புகள் ஆகியவற்றைச் சிதைக்கும் ஒரு கடினமான செயல்” என்று அவர் கூறினார்.
விவாகரத்திற்குப் பிறகு கண்ணியத்துடன் வாழ்வது எப்படி?
துக்கத்திற்கு அனுமதி கொடுங்கள்: "நான் பலமானவள்" என்று எப்போதும் காட்டிக்கொள்ள வேண்டாம். அழலாம், அமைதியாக இருக்கலாம், தேவைப்பட்டால் ஒரு நிபுணரின் உதவியை நாடலாம். வலியின் பெயர் அறிந்தால்தான், குணமடைய முடியும்.
சத்தத்திலிருந்து விலகி இருங்கள்: வதந்திகள், ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருங்கள். உங்கள் வலியை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மன அமைதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பழியை விடுங்கள், பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: "யார் இதற்கு காரணம்?" என்று கேட்பதற்குப் பதிலாக, "இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள முடியும்?" என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். வளர்ச்சி என்பது பழியைச் சுமப்பதல்ல, அது தன்னைத் தானே ஆராய்வதில்தான் இருக்கிறது.
அன்பானவர்களுடன் இருங்கள்: நண்பர்கள், ஆலோசகர்கள், அல்லது ஆதரவு குழுக்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்கள் உங்களை உங்கள் திருமண நிலையை வைத்து எடைபோட மாட்டார்கள். மாறாக, உங்கள் மதிப்பை உங்களுக்கு நினைவூட்டுவார்கள்.
மூடுதலுக்கான சடங்குகளை உருவாக்குங்கள்: யாருக்கும் அனுப்பத் தேவையில்லாத ஒரு கடிதத்தை எழுதுங்கள். சிறிய அளவிலான பிரியாவிடை நிகழ்வுகளை நடத்துங்கள். எது நன்றாக இருந்தது, எது உடைந்து போனது என்பதை உணர்ந்து, அதை முழுமையாக விடுங்கள்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.