Advertisment

கிடுகிடுவென காலையில் சுகர் கூடுதா? இதைப் பண்ணுங்க!

அதிக அளவு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சரியாக வேலை செய்வதைத் தடுக்கலாம் மற்றும் அவை தயாரிக்கும் இன்சுலின் அளவைக் குறைக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Why diabetics are at risk of increased blood sugar levels in the morning

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கும் கார்டிசோல் ஹார்மோன் - காலை 6 மணி முதல் 10 மணி வரை உச்சம் பெறுவதால், நீரிழிவு நோயாளிகள், காலை நேரங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisment

மன அழுத்தம், கார்டிசோல் ஹார்மோனுடன் தொடர்புடையது, மேலும் இந்த ஹார்மோன் காலை நேரங்களில் அதிகமாக இருக்கும். நேரமாக ஆக அது படிப்படியாக குறைந்து, நள்ளிரவில் மிகக் குறைவாக இருக்கும் என்று டாக்டர் ஷியாம் சுந்தர் சி எம் கூறினார்.

இதை ஒப்புக்கொண்ட மருத்துவர் மனிரா தஸ்மனா, கார்டிசோல் அளவுகள் உடனடியாக அல்லது எழுந்தவுடன் முதல் மணிநேரத்தில் அதிகமாக இருக்கும். ஏற்கனவே மன அழுத்தத்தில் உள்ள நோயாளிகளில், காலையில் கார்டிசோலின் அளவு உச்சத்தில் உள்ளது. இது கார்டிசோல் அவேக்கனிங் ரெஸ்பான்ஸ் (CAR) என்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

ஏன் இப்படி நடக்கிறது?

இரவு முழுவதும் உண்ணாமல் இருப்பதால், காலையில் குளுக்கோஸ் அளவு குறைகிறது. அதை பராமரிக்க, குளுகோகன், எபிநெஃப்ரின் மற்றும் கார்டிசோல்  ஆகிய மூன்று ஹார்மோன்கள் எதிர் கட்டுப்பாட்டாளர்களாக செயல்படுகின்றன.

ஆனால், கார்டிசோல் ஒரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்; அதிகாலை நேரத்தில் நோன்பு காலத்தில் ஒருவருக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஒரு எதிர்வினையாக இது அதிகரிக்கிறது, என்று டாக்டர் ஷியாம் கூறினார்.

அது மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையின் காரணமாகவும் காலையில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. பிஸியான வேலை, இஎம்ஐ, கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள் ஆகியவை நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. எனவே காலையில், நம் உடல் ஒரு ஸ்ட்ரெஸ் ஹார்மோனை வெளியிடுகிறது, இது பொதுவாக உங்களுக்கு பயம், வெறுமை போன்ற உணர்வைத் தருகிறது. இந்த காரணத்திற்காக, நோயாளிகள் எப்போதும் கவலையுடன் படுக்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று டாக்டர் தஸ்மனா கூறினார்.

இது நீரிழிவு நோயாளிகளை எவ்வாறு பாதிக்கிறது?

உயர் கார்டிசோல் அளவுகள், இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் என்பதால் இது நீரிழிவு நோயாளிகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக அளவு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சரியாக வேலை செய்வதைத் தடுக்கலாம் மற்றும் அவை தயாரிக்கும் இன்சுலின் அளவைக் குறைக்கலாம், இது டைப் 2 நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்று டாக்டர் ஐஸ்வர்யா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

publive-image

தியானம் செய்வது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்

இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஷியாம், அதிக கார்டிசோல் அளவுகள் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது, அதன் எதிர்ப்பை அதிகரிக்கிறது என்பதை தெளிவுபடுத்தினார். இதன் மூலம், இது நீரிழிவு நோயைத் துரிதப்படுத்துகிறது அல்லது தற்போதுள்ள நீரிழிவு நோயாளிகளின் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மோசமாக்குகிறது, என்று அவர் கூறினார்.

இரண்டையும் பாதிக்கும் மற்றொரு காரணி அதிகமாக சாப்பிடுவது. சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அதிகமாக சாப்பிடுவார்கள், இது டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறினார்.

பிற உடல்நல பாதிப்புகள்

நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, இந்த அதிகரித்த ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் (stress hormones) மற்றவர்களையும் பாதிக்கலாம். அதிகாலை அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், பதட்டம், மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (irritable bowel syndrome), நாள்பட்ட உடல் வலி, மனச்சோர்வு மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற நிலைமைகளை மோசமாக்குகிறது, என்று டாக்டர் ஜெயந்த தாகுரியா கூறினார்.

நீங்கள் என்ன செய்யலாம்?

நீரிழிவு நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகள் டாக்டர் தகுரியா பரிந்துரைத்த இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதிகாலை மன அழுத்தத்தை தடுக்கலாம்.

* அதிகாலையில் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்

* நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்

* சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளுதல்

* சரியான தூக்கத்தை உறுதி செய்யுங்கள்

*மது அருந்துதல், புகைத்தல் மற்றும் பிற போதை பழக்கங்களைத் தவிர்க்கவும்

காலையில் தியானம் செய்வதன் நன்மைகளைப் பகிர்ந்து கொண்ட டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தியானம் செய்வதால் மனதை அமைதிப்படுத்த முடியும். இந்த வேகமான உலகில், நாம் சில நேரங்களில் உட்கார்ந்து ஓய்வெடுக்க மறந்துவிடுகிறோம். ஓய்வெடுப்பதும் தியானிப்பதும் அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment