/indian-express-tamil/media/media_files/2025/02/26/ysK6jHo2SPu68xKd0nXE.jpg)
குடிப்பழக்கம் கொண்டவர்கள் அதன் ஆபத்தான எல்லையை அடைந்து விட்டார்களா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என மருத்துவர் கௌதமி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் குடிப்பழக்கம் கொண்டவர்கள் சமீப காலமாக தாங்கள் அதிகமாக குடிப்பதாக நினைத்தால், அவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைந்து விட்டார்கள் என உணர்ந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் குடிப்பழக்கத்தினால் பெரிதாக ஏதேனும் மாற்றங்களை உடலில் உணராமல் இருப்பார்கள். ஆனால், ஒரு நிலையில் தாங்கள் அதிகமாக குடிப்பதாகவும், அதனை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். இவ்வாறு தோன்றினால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டதை உணர்ந்து கொள்ளலாம்.
இதேபோல், தன்னுடைய குடிப்பழக்கத்தை குறித்து யாரேனும் விமர்சனம் செய்தால், உடனடியாக எரிச்சல் உணர்வு தோன்றும். பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆதரவாக பேச மாட்டார்கள். அப்பழக்கத்தை கைவிடுமாறு தான் வலியுறுத்துவார்கள். ஆனால், இந்த அறிவுரைகள் அனைத்தும் சில சமயங்களில் அதீத எரிச்சலை உருவாக்கும் என்று மருத்துவர் கௌதமி கூறுகிறார். இதன் மூலமாகவும் குடிப்பழக்கம் ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது என அறியலாம்.
இதற்கு அடுத்ததாக குற்ற உணர்ச்சி உருவாகும். குடிப்பழக்கத்தின் தொடக்க நிலை அதிகப்படியான மகிழ்ச்சியை கொடுக்கலாம். குறிப்பாக, பலருடன் சேர்ந்து மது அருந்துவது சிலருக்கு நல்ல அனுபவத்தை கொடுப்பதை போன்று உணர்வார்கள். ஆனால், ஒரு நிலைக்கு மேல் செல்லும் போது மதுப்பழக்கம் தன்னையும், தன்னை சார்ந்து இருப்பவர்களையும் பாதிப்பதை உணரத் தொடங்குவார்கள். இப்படி குடிப்பழக்கத்தை எண்ணி குற்ற உணர்ச்சி உருவாகும் போது, அதன் ஆபத்தான கட்டத்தை எட்டி இருப்பார்கள்.
இறுதியாக, காலை எழுந்ததும் உடனடி தேவையாக நம் உடலும், மனமும் மதுபானத்தை தேடினால் அவர் மிகவும் ஆபத்து நிறைந்த நிலையை அடைந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். முதலில் வேலையை முடித்து விட்டு மது அருந்தலாம் என்று நினைப்பார்கள். அதன் பின்னர், பணிக்கு இடையே மது அருந்திக் கொள்ளலாம் என்று தோன்றும். கடைசியாக, மது அருந்தாமல் எந்தவொரு பணியையும் செய்ய முடியாத நிலை உருவாகும்.
இந்த நான்கு விஷயங்களின் மூலம் ஒரு நபர், தன்னுடைய மதுப்பழக்கம் ஆபத்தான நிலையை அடைந்திருக்கிறதா என அறியலாம் என்று மருத்துவர் கௌதமி விளக்கம் அளித்துள்ளார்.
நன்றி - Dr Gautami Thirumalaisamy Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.