வாய், உதட்டில் வரும் கட்டிகள்… காரணம் இதுதான்; என்ன செய்தால் சரியாகும்? டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்
முகோசெல் என்பது வாயில் தோன்றும் திரவம் நிறைந்த நீர்க்கட்டி ஆகும். இவை பெரும்பாலும் கீழ் உதட்டின் உட்புறத்தில் தோன்றும். இவை ஏற்படுவதற்கான காரணம் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
முகோசெல் என்பது வாயில் தோன்றும் திரவம் நிறைந்த நீர்க்கட்டி ஆகும். இவை பெரும்பாலும் கீழ் உதட்டின் உட்புறத்தில் தோன்றும். இவை ஏற்படுவதற்கான காரணம் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
சிலருக்கு அடிக்கடி வாயில் ஒரு விதமான சிறிய கட்டி உருவாகும். குறிப்பாக, இவை கீழ் உதட்டின் உட்புறத்தில் இருக்கும். இந்த வகையான கட்டிகள் ஏற்படுவதற்கான காரணம் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
இது போன்ற கட்டியை முகோசெல் என்று கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். முகோசெல் என்பது வாயில் தோன்றும் திரவம் நிறைந்த நீர்க்கட்டி ஆகும். பெரும்பாலும், கீழ் உதட்டின் உட்புறத்தில் இவை தோன்றும். இந்த வகையான கட்டிகள் வலியை ஏற்படுத்தாது என்றும், இவை சற்று நகரக் கூடியதாக இருக்கும் என்றும் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
முகோசெல்கள் ஒப்பீட்டளவில் பொதுவானவை. சுமார் 1000 பேரில் 4 பேரை பாதிக்கிறது. இது பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்ட நபர்களில் காணப்படுகிறது. ஆனால் எந்த வயதினருக்கும் இது போன்ற கட்டி வரக் கூடும். இந்தக் கட்டி வலி எடுக்காமல் இருப்பதனால் புற்றுநோய் கட்டியாக இருக்கக் கூடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். ஆனால், அந்த அளவிற்கு இந்த கட்டி குறித்து பயப்பட வேண்டிய தேவையில்லை.
இந்தக் கட்டிகள் பெரும்பாலும் 2 மில்லி மீட்டர்கள் முதல் 2 சென்டி மீட்டர்கள் வரை வளரக் கூடும். இது பெரும்பாலும் கீழ் உதட்டின் உட்புறத்தில் காணப்பட்டாலும், வாயின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இது வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
Advertisment
Advertisements
இந்த நீர்க்கட்டிகள் உமிழ்நீரால் நிரப்பப்பட்டுள்ளன. உமிழ்நீர் சுரப்பி குழாய்கள் அடைக்கப்படும் போது முகோசெல்கள் ஏற்படுகின்றன. இதனால் உமிழ்நீர் குவிந்துவிடும். பல சந்தர்ப்பங்களில், முகோசெல்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. தானாகவே சரியாகி விடும் தன்மை இந்த முகோசெல்கள் கட்டிக்கு இருக்கிறது.
எனினும், பேசும் போது இடையூறு அல்லது உணவு எடுத்துக் கொள்ளும் போது அசௌகரியம் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.
அடிக்கடி உதடு அல்லது கன்னத்தை கடிப்பதனால் இந்தக் கட்டிகள் உருவாகும் என்று கூறும் மருத்துவர் கார்த்திகேயன், அவ்வாறு செய்யாமல் இருப்பதன் மூலம் இந்தக் கட்டிகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறுகிறார். இது தவிர, புகையிலை பயன்படுத்துபவர்கள் அல்லது வாயில் ஏதாவது காயம் ஏற்பட்டால் முகோசெல்கள் ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.