சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சர்க்கரை நோய் குறித்து செய்த ஆய்வில் காசநோயால் பாதிக்கப்பட்ட பாதி பேருக்கு (50%) சர்க்கரை நோயோ, சர்க்கரை நோய் பாதிப்பின் முந்தைய நிலையோ (Pre-diabetic) இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் உதவியோடு REgional Prospective Observational Research for TB- RePORT நிறுவனம் வாயிலாக காசநோய்க்கும், சர்க்கரை நோய்க்குமான தொடர்பு குறித்தான ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன.
மே 2023-ல் Diabetes and Metabolic Syndrome என்ற ஆய்வுக் கட்டுரையில் வெளிவந்த தகவலின் படி, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை (வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு-100-125 மி.கி/100 மி.லி ரத்தம் அல்லது, HBA1C அளவு-5.7-6.4) கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் காசநோயை ஒழிப்பது (2025க்குள்) மிகவும் கடினம் என தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் 187 பேர் சேர்க்கப்பட்டு, அதில் 76 பேருக்கு வழக்கமான சர்க்கரை அளவும், 111 பேருக்கு சற்று கூடுதல் சர்க்கரை அளவும்எ(HBA1C-5.7%-6.4%)இருந்தது. இரு குழுக்களுக்கும் காசநோய் சிகிச்சை முடிவில், சளியில் காசநோய் கிருமி இருப்பது ஒப்பிடப்பட்டதில், வழக்கமான சர்க்கரை அளவு இருப்பவர்கள் மத்தியில் 8.6% பேருக்கும், சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பு உள்ளவர்கள் மத்தியில் 23.8% பேருக்கும் நேர்மறை முடிவுகள் (Positive) இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், சிகிச்சைக்குப் பின் காசநோய் பாதிப்பு மீண்டும் வருவதும் (Relapse), இறப்பும் சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பு உள்ளவர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பு உள்ளவர்களிடம் இறப்பு விகிதம்-6.3% எனவும், வழக்கமான சர்க்கரை அளவு இருப்பவர்களிடம் அது 1.3% என குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், தற்போதைய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களை (ரத்தத்தில் சர்க்கரை அளவு 200 மி.கி./100 மி.லி ரத்தம்) மட்டுமே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டங்கள் உள்ளன.
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் திட்டங்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல், ரத்தத்தில் மட்டும் சர்க்கரை அளவு சற்றுக் கூடுதலாக இருப்பதால், அவர்களை கண்டறிவதில் சிக்கல்கள் இருப்பதால், அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் விடுபட்டு போவதால், காசநோய் ஒழிப்பு சாத்தியமில்லாமல் போகும் வாய்ப்பு நிறைய உள்ளதால், தமிழக/இந்திய அரசுகள் சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பு கொண்டவர்களை கூடுதல் முயற்சிகளைக் கொண்டு கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிடில் 2025-க்குள் காசநோய் ஒழிப்பு என்பது சாத்தியமாகாது.
தமிழகத்தில் 2022-ல் செய்த ஆய்வில் காசநோய் உள்ள 25% பேருக்கு சர்க்கரை நோயும் சேர்ந்தே இருப்பது தெரிய வந்துள்ளது. ஆய்வுகளின்படி தமிழகத்தில் சர்க்கரை நோயின் முந்தைய பாதிப்பு ஏறக்குறைய 8.5% என கண்டறியப் பட்டுள்ளதால், தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து உரிய சிகிச்சை(உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி..... போன்று) அளிக்காவிடில் காசநோயை 2025-க்குள் ஒழிக்க முடியாது என உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். இந்தியாவில் 100 மில்லியன் பேர் சர்க்கரை நோயாலும், 136 மில்லியன் பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது புள்ளி விவரமாக உள்ளது. தமிழக/இந்திய அரசு உரியமுறையில் காசநோயை ஒழிக்க செயல்படுமா?
-மரு.வீ.புகழேந்தி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“