/indian-express-tamil/media/media_files/2025/04/19/wr4h9b6o28U750eku6gj.jpg)
இன்றைய சூழலில் முடி உதிர்வு பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. இதற்காக மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு நிறைய பேருக்கு அதன் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக, ஆண் மற்றும் பெண் என பாலின பேதமின்றி இந்தப் பிரச்சனை எல்லோரிடத்திலும் இருக்கிறது.
முடி உதிர்வு பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, சத்துக் குறைபாடு என்று வெவ்வேறு காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி மற்றொரு கேள்வியும் எல்லோரது மனதிலும் இருக்கிறது. அதன்படி, தலைக்கு எண்ணெய் தேய்க்கலாமா? என்ற கேள்வி நிறைய பேரிடம் உள்ளது. அப்படியே தேய்த்தாலும் எந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.
இவை அனைத்திற்கும் மருத்துவர் ராதா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அந்த வகையில், தலை முடிக்கு தேய்க்க தேங்காய் எண்ணெய்யை தவிர வேறு எதுவும் சிறந்தது இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தும் முறை இருக்கிறது. தலைக்கு குளிப்பதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாக தலை முடியில் மட்டும் தேங்காய் எண்ணெய்யை தேவையான அளவு தேய்த்துக் கொள்ளலாம்.
அதன் பின்னர், மைல்டான ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். குறிப்பாக, முடியின் வேர்ப்பகுதியில் படும் வகையில் தேங்காய் எண்ணெய்யை தேய்க்க வேண்டாம் என்று மருத்துவர் ராதா சுப்பிரமணியன் அறிவுறுத்துகிறார். ஒருவேளை, முடியின் வேர்ப்பகுதி மிகவும் வறட்சியாக இருப்பவர்கள் மட்டும், தேங்காய் எண்ணெய்யை தலையில் படும் வகையில் தேய்த்துக் கொள்ளாலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr Radha Dermatology Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.