கல்லீரலில் படியும் கொழுப்பு; இந்த நேரத்தில் தூக்கம் அவசியம்: டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்
கல்லீரலில் கொழுப்பு படிவதற்கான காரணம் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வாழ்க்கை முறை மாற்றம் மூலம் சீரமைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லீரலில் கொழுப்பு படிவதற்கான காரணம் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வாழ்க்கை முறை மாற்றம் மூலம் சீரமைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் ஃபேட்டி லிவர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். உதாரணமாக, 40 பேருக்கு ஸ்கேன் செய்து பார்த்தால் அதில் 2 அல்லது 3 பேருக்கு ஃபேட்டி லிவர் கிரேட்-2 இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு படியும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர இரவு 9:30 மணியில் இருந்து காலை 5 மணி வரை தூக்கம் அவசியம் ஆனது.
ஆனால், இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தூங்காமல் இருப்பவர்களுக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதால் ஏற்படும் பசியின் காரணமாக, அந்த நேரத்தில் சாப்பிடுவதும் ஃபேட்டி லிவருக்கு வழிவகுக்கும்.
மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு இருப்பவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு ஏற்படும் என்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார். இது தவிர அதிகப்படியான மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களுக்கு கூட அதிகமாக ஃபேட்டி லிவர் ஏற்படுவதற்கு, சமையலில் அதிகமாக எண்ணெய் சேர்ப்பது காரணமாக அமைகிறது. எனவே, எண்ணெய்யின் அளவை கட்டுப்படுத்துவது பாதிப்பை குறைக்க உதவும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டையும் வெயிலில் காய வைத்து பொடியாக மாற்றி கசாயம் செய்து குடிக்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார். இதேபோல், சுருள் பட்டையையும் பொடியாக்கி கசாயம் குடிக்கலாம் என்று அவர் கூறுகிறார். இந்த இரண்டையும் மாலை நேர தேநீருக்கு பதிலாக குடிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தபடியாக, மூன்று வேளை உணவு சாப்பிட்ட பின்னரும் சுமார் 15 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்யலாம் என்று அவர் வலியுறுத்துகிறார். மன அழுத்தத்தை குறைத்து, இரவு நன்றாக உறங்குவதன் மூலம் ஃபேட்டி லிவர் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா கூறியுள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.