கருஞ்சீரகத்தில் மருத்துவ பயன்கள் அதிகமாக இருப்பதால் அதனை தினசரி சாப்பிடலாம் என பலர் கூறுகின்றனர். ஆனால், கருஞ்சீரகத்தை தினசரி சாப்பிடக் கூடாது என மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, தினசரி கருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் மருத்துவ குறிப்புகள் குறித்து இணையத்தில் கிடைக்கும் தகவல்களை, பொதுமக்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர். அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை உணராமல் பலருக்கும் இத்தகவல்களை பகிர்கின்றனர். இவ்வாறு செய்யக் கூடாது என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். நோய்கள் ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் மாறுபட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி, கோதுமை என அனைத்து உணவு பொருள்களும் நல்லது தான் எனக் கூறும் சிவராமன், அதனை எந்த அளவிற்கு சாப்பிட வேண்டும், யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொள்வது அவசியம் எனக் கூறுகிறார். நல்ல உணவுகள் என்பதற்காகவே அனைத்தையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது சரியான அணுகுமுறை கிடையாது.
சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு இருப்பவர்கள், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் வேண்டுமானால் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம். சில நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் குழந்தைகளுக்கு தினசரி கருஞ்சீரகத்தை கொடுக்கக் கூடாது என மருத்துவர் சிவராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் சூடு ஏற்பட்டு அரிப்பு உருவாகும் அபாயம் உள்ளது.
எனவே, மருத்துவ குணம் நிறைந்தது என்பதற்காகவே ஒரு பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.