உடல் எடை அதிகரித்திருப்பவர்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது மாத்திரை உட்கொண்டு எடையை குறைக்கலாமா என எதிர்பார்க்கின்றனர் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதற்கு ஏற்றார் போல் பல நிறுவனங்களும் தங்கள் மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என விளம்பரம் செய்கின்றனர்.
ஆனால், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் சீரான உடற்பயிற்சிகளின் மூலமாக தான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என சிவராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என சிவராமன் பரிந்துரைத்துள்ளார். இதேபோல், இனிப்பு வகைகளையும் தவிர்த்து விட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழங்கு வகைகள், பச்சரிசி, மைதா போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதன் தொடர்ச்சியாக, காலை எழுந்ததும் எலுமிச்சை சாறை சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். அதன் பின்னர், காலை 8 மணிக்கு பழங்களை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாதுளை, தர்பூசணி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடலாம்.
இதையடுத்து சுமார் 11 மணிக்கு கிரீன் டீ அல்லது மோர் குடிக்கலாம். மதிய வேளையில் தானியங்கள், வரகு அரிசி போன்றவற்றில் செய்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதனுடன் காய்கறிகளை அதிகமான அளவு சாப்பிடலாம். மாலை நேரத்தில் சர்க்கரை, பால் சேர்க்காமல் தேநீர் பருகலாம். இரவு நேரத்தில் வெண்டைக்காய் பொறியல், அவரைக்காய் பொறியல், பீன்ஸ் போன்ற காய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
இது தவிர வாரத்திற்கு ஒரு நாள் முற்றிலுமாக பழங்கள் மற்றும் நீர் உணவுகளை சாப்பிடலாம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இப்படியான உணவு திட்டத்துடன் நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.