புகை பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சூடாக டீ அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
புகை பழக்கம் மற்றும் மது பழக்கம் உள்ளவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சிகர தகவல்களை அளிக்கிறது.
சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இத்தகையை தகவல்கள் வெளியாகியுள்ளன. 30 முதல் 79 வயதுடைய 4,56,155 பேர் இந்த ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டனர். ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்களில் பாதி பேரை 9 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் கூர்ந்து கவனித்தனர். இதில், 1,731 பேருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டது.
சூடான டீ, உணவுக்குழாயில் உள்ள செல்களை பாதிப்பதாகவும், அவ்வாறு சூடான டீ அருந்துபவர்கள் மது பழக்கம், புகை பழக்கத்தைக் கொண்டிருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகும் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.