பாதாம், வால்நட், பேரீச்சம்பழம் மற்றும் பல வகையான உலர் பழங்களை இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிட்டால், அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அதிகமாக நம் உடலுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றை பெரும்பாலானோர் நீரில் ஊறவைத்து சாப்பிடுவார்கள். ஆனால், பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்குமா என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Soaking your dry fruits overnight? Should you do it in water or milk?
முதலில் உலர் பழங்களை நீரில் ஊறவைப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது எனக் காணலாம். "நீரில் ஊறவைப்பதன் மூலம் உலர் பழங்கள் மிருதுவாகின்றன. செரிமானத்திற்கு உதவும் வகையில் அமைகிறது. பைடிக் அமிலத்தை குறைப்பதன் மூலம் இவை அசௌகரியத்தை நீக்குகிறது. ஊட்டச்சத்து நன்றாக உறிந்து கொள்ளப்படுகிறது" என உணவியல் நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இவை பயனுள்ள என்சைம்களை செயல்படுத்துகிறது என்றும், ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், உலர் பழங்களில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு புறம், உலர் பழங்களை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதில் பல ஊட்டச்சத்து மற்றும் குடலுக்கு நன்மைகளை அளிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "உலர் பழங்களில் இருந்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றுடன் பால் புரதம் மற்றும் கால்சியம் போன்றவற்றை இணைப்பதன் மூலம் ஊட்டச்சத்து அடர்த்தியான பானம் தயாரிக்கப்படுகிறது. இவை உலர் பழங்களை மிருதுவாக்கி, ஊட்டச்சத்து நன்றாக உறிந்து கொள்ளப்படுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது" என கனிக்கா கூறுகிறார். மேலும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உலர் பழங்களை பாலில் ஊறவைத்து உட்கொள்வது ஆரோக்கியமான அணுகுமுறையாகத் தெரிகிறது. ஆனால், அவற்றின் தேவைகள் மற்றும் சில உலர் பழங்களின் சர்க்கரை உள்ளடக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சிறந்த அணுகுமுறை எது?
இரண்டுக்கும் பிரத்தியேகமான பலன்கள் இருக்கிறது. "நீரில் ஊறவைப்பது முதன்மையாக செரிமானத்தை மேம்படுத்துகிறது. பைடிக் அமிலத்தை குறைக்கிறது. பாலில் ஊறவைப்பது புரதம், கால்சியம் மற்றும் முழுமையான சுவையையும் வழங்குகிறது." என கனிக்கா விளக்கமளித்துள்ளார்.
இரண்டு அணுகுமுறைகளும் உலர் பழங்களின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்த தனித்துவமான மற்றும் பயனுள்ள வழிகளை வழங்குவதால், இவை இரண்டுமே சிறந்ததாக பார்க்கப்படுகிறது. குறைந்த கலோரி பானத்தைத் தேடும் நபர்கள் நீரில் ஊறவைத்து உலர் பழங்களை சாப்பிடலாம். புரதம் மற்றும் கால்சியம் முக்கியம் என்றால், அவர்கள் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“