பெரும்பாலானோர் வீட்டில் பயன்படுத்தும் மெத்தை விரிப்புகள், போர்வைகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்வோம். ஆனால், மெத்தைகளை அவ்வளவாக சுத்தம் செய்திருக்க மாட்டோம். ஏனெனில், மெத்தையை சுத்தப்படுத்துவது கடினமான காரியம். இதனை எப்படி எளிதாக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
முதலில் காலாவதியான ஏதாவது இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளை இடித்து பொடியாக்க வேண்டும். பின்னர், பாதியளவு மாத்திரை பொடி, முகத்திற்கு பயன்படுத்தும் பௌடர் சிறிதளவு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
இந்தப் பொடியை நேரடியாக மெத்தையில் தூவாமல், ஒரு வடிகட்டியின் மூலம் மெத்தை முழுவதும் தூவி விட வேண்டும். இந்தப் பொடியை தூவி சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். இவை மெத்தையில் உள்ள துர்நாற்றத்தை போக்கி விடும்.
இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் மீதமிருக்கும் மாத்திரை பொடி, ஒரு ஸ்பூன் கம்ஃபோர்ட் சேர்த்து கலக்க வேண்டும். இந்த தண்ணீரில் பழைய சாக்ஸை நனைத்து, அதனை க்ளவுஸ் போன்று கையில் மாட்டிக் கொண்டு, மெத்தையை சுத்தம் செய்யலாம். இப்படி செய்வதால் மெத்தையில் முதலில் தூவி இருந்த பொடியுடன் சேர்த்து அனைத்து கறைகளும் நீங்கி விடும்.
மேலும், மெத்தையை வெயிலில் காய வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஃபேன் காற்றில் காய வைத்தாலே போதுமானது.