/indian-express-tamil/media/media_files/2025/06/09/yYLhc5rVue76XZjRfguK.jpg)
உங்கள் வீடுகளில் ரோஜா செடியில் பூக்கள் அதிகம் பூக்க, இந்த எளிய இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம். இந்த உரங்கள் செடிகளுக்குத் தேவையான சத்துக்களை அளித்து, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனை எப்படி தயார் செய்வது பயன்படுத்துவது என்றெல்லாம் மூலிகை உலகம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
ரோஜா செடிக்கு வெந்தய உரம்
ரோஜா செடிக்கு அதிகம் பூக்கள் பூக்க வைக்கும் எளிய வழிகளில் ஒன்று வெந்தய உரம். வெந்தயத்தில் அதிக அளவில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் ரோஜா செடியின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. குறிப்பாக, புதிய தளிர்கள் மற்றும் மொட்டுகள் உருவாக இந்த சத்துக்கள் உதவும்.
இந்த உரத்தைத் தயாரிக்க, ஒரு ரோஜா செடிக்கு ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் போதும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ரோஜா செடியின் அடிப்பகுதியிலுள்ள மண்ணை, வேர்களுக்கு சேதாரம் ஏற்படாதவாறு லேசாகக் கிளறி விட வேண்டும். அதன்பின், அரைத்த வெந்தயத்தூளை அந்த மண்ணில் தூவி விட வேண்டும். இந்த வெந்தய உரம், சுமார் 20 நாட்களுக்கு செடிக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தொடர்ந்து அளிக்கும்.
காபி பவுடர் கலந்த நீர்
வெந்தய உரம் இட்ட பிறகு, ரோஜா செடியின் வளர்ச்சிக்கு மற்றொரு எளிய வழியைப் பின்பற்றலாம். ஒரு பக்கெட் அளவு தண்ணீரில், ரூ. 2 மதிப்புள்ள ப்ரூ காபி பவுடரைச் சேர்க்க வேண்டும். காபி பவுடர் தண்ணீரில் எளிதாகக் கரைந்துவிடும். இந்தக் கலவையை ரோஜா செடிக்கு ஊற்ற வேண்டும்.
வெந்தய உரம் மற்றும் காபி பவுடர் கலந்த நீர் இரண்டும் சேர்ந்து, ரோஜா செடிக்கு ஒரு சக்தி வாய்ந்த உரமாகச் செயல்படும். இந்த உரங்களின் கூட்டு கலவை, செடியின் வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து, அதன் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும். இதன் விளைவாக, ரோஜா செடியில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பூக்கள் பூக்கும். இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்திய பின்னர், ஒரு வாரம் வரை வேறு எந்த உரத்தையும் செடிக்கு இடத் தேவையில்லை. இந்த முறை உங்கள் ரோஜா செடியை ஆரோக்கியமாகவும், பசுமையாகவும், அதிக பூக்களுடனும் வைத்திருக்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.