பருப்பு இல்லாமலும் சாம்பார் வைக்க முடியும். அதுவும், இட்லி- தோசைக்கு செம காம்பினேஷன் இது. அவசரத் தேவைக்கான இந்த திடீர் சாம்பார் ரெசிபியை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - இரண்டு டீ ஸ்பூன், கடுகு - கால் டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன், கடலை பருப்பு - ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் - அரை டீ ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - 4, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள் தூள் - சிறிதளவு, உப்பு - தேவைகேற்ப, தண்ணீர் - தேவையான அளவு, கடலை மாவு - 2 டீ ஸ்பூன்
பருப்பு இல்லாத திடீர் சாம்பார் செய்வது எப்படி?
திடீர் சாம்பார் செய்முறை வருமாறு: வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் . நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும். பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.