கோவையில், ஏழை, எளிய பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் வகையில், தன்னார்வலர்கள் இணைந்து 25 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்களை வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 25 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 25 மின்சார ஆட்டோக்கள் தந்து உதவி செய்துள்ளனர். நடுத்தர ஏழை எளிய பெண்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, "சிங்கப்பெண்ணே" என்ற தலைப்பில் மின்சார ஆட்டோ வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது.
நகரில் ஆட்டோ ஓட்டும் 25 பெண்களைத் தேர்வு செய்த தன்னார்வலர்கள், ஒவ்வொருவருக்கும் 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சார ஆட்டோக்களை வழங்கியுள்ளனர். இதில் ஒவ்வொரு ஆட்டோவுக்கும் 2.5 லட்சம் ரூபாய் தன்னார்வலர்களின் பங்களிப்பாகவும், 1 லட்சம் ரூபாய் அரசின் மானியமாகவும், மீதமுள்ள 1 லட்சம் ரூபாய் ஆட்டோ ஓட்டும் பெண்களின் பங்களிப்பாகவும் பெறப்பட்டு மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.
இந்த மின்சார ஆட்டோக்கள் இயங்குவதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படுகிறது. அதேபோன்று, மின்சாரத்தால் ஆட்டோ இயங்குவதால், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு அதிக தொகை செலவிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த 25 மின்சார ஆட்டோக்கள், அப்பெண்களுக்குப் பெரும் உதவியாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
செய்தி - பி. ரஹ்மான்