/indian-express-tamil/media/media_files/2025/08/27/eps-reveals-untold-stories-in-exclusive-interview-2025-08-27-12-56-01.jpg)
ஒரே பெண்ணை பார்த்து, அவரையே திருமணம் செஞ்சேன்; பர்ஷன்ல் லைஃப் பகிரும் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க.-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளில் தமிழகம் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், 'கலாட்டா வாய்ஸ்' யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலின் முன்னோட்டக் காட்சி (டீசர்) தற்போது வெளியாகியுள்ளது. இதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் ஈடுபாடு குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த டீசரில் இடம்பெற்றுள்ள கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த சுவாரஸ்யமான பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட வாழ்க்கை & விவசாயம்
கேள்வி: உங்கள் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?
இ.பி.எஸ். பதில்: எனது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
கேள்வி: அவர்களைப் பார்த்த முதல் தருணம் எப்படி இருந்தது?
பதில்: ஒரே பெண்ணைத்தான் பார்த்தேன். அவர்களையே திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னுடன் ஒத்துப்போனார். குடும்பத்தில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள் ஏதாவது பேசி பிரச்னையை உண்டாக்கிவிட வேண்டாம் என நகைச்சுவையாகக் கூறினார்.
விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம்:
கேள்வி: விவசாயம் மீது உங்களுக்கு அவ்வளவு ஆசையா?
இ.பி.எஸ். பதில்: செடி வாடிப் போயிருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அந்தச் செடி வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் விவசாயிகள். அது வாடிப்போன வாழ்க்கை முடிந்துபோச்சு. என் தாத்தா, அப்பா, அம்மா எல்லாம் விவசாயம். நானும் விவசாயி. விவசாயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, விவசாயப் பணியும் செய்துகொண்டிருக்கிறேன். இன்றைக்கும் என்னுடைய பணி விவசாயம்தான், தொழில் விவசாயம்தான்.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த படம் எது?
இ.பி.எஸ். பதில்: எம்.ஜி.ஆர். நடித்த 'அரச கட்டளை'. அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். இப்போது என்ன நடக்கிறதோ, அதை அப்போதே படமாக எடுத்து நடித்தார்.
கேள்வி: இப்போது நீங்கள் படம் பார்ப்பது இல்லையா?
இ.பி.எஸ். பதில்: நான் திரையரங்கிற்குச் சென்று 20 வருடங்கள் ஆகிவிட்டன.
அரசியல் பயணம் & தலைமை
கேள்வி: 1974-ல் பொறுப்பேற்கும்போது முதலமைச்சர் ஆவோம் என்று நினைத்தீர்களா?
இ.பி.எஸ். பதில்: நான் என்றுமே நினைக்கவில்லை. கிளைச் செயலாளராகப் பணியைத் தொடங்கினோம். இறைவன் படிப்படியாகக் கொடுத்திருக்கிறார்.
கேள்வி: அரசியல்வாதிகளைப் பார்த்தாலே பயப்பட வேண்டும் என்று தோன்றுகிறது?
இ.பி.எஸ். பதில்: என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. பயந்துகொண்டா பேசிக்கிட்டு இருக்கீங்க?
ஜெயலலிதா புகைப்படம்:
கேள்வி: அனைவரும் சட்டையில் அந்தப் புகைப்படம் வைத்துள்ளீர்கள்?
இ.பி.எஸ். பதில்: இப்பவும் வைத்துள்ளோம். தலைவருக்குப் பிறகு அம்மாதான் இந்த இயக்கத்திற்கு. எங்களுடைய தலைவருக்குக் கொடுக்கும் மரியாதையைப் போல அவர் வழியில் செயல்பட வேண்டும் என்று இந்தப் புகைப்படமே எங்களுக்கு வலிமையைக் கொடுக்கும்.
கேள்வி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உங்களைப் பற்றிப் பேசிய வீடியோ எப்போதாவது போட்டு பார்ப்பீர்களா?
இ.பி.எஸ். பதில்: மனதுக்குள்ளே இருக்கிறது. எதற்குப் போட்டு பார்க்க வேண்டும்?
‘எடப்பாடியார்’ எனப் பெயர் மாற்றம்:
கேள்வி: பழனிசாமி என்பவர் எடப்பாடியார் என்று மாறியது பற்றி?
இ.பி.எஸ். பதில்: நான் பழனிசாமி என்றுதான் இருந்தேன். அம்மாதான் 'எடப்பாடியார்' என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் முழு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. அதில் அவர் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னோட்டக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.